விடைபெற்றார் ஏஞ்சலா மெர்க்கல்... ஜேர்மனியின் புதிய சேன்ஸலர் இவர்தான்
ஜேர்மன் சேன்ஸலராக 16 ஆண்டுகள் பதவி வகித்த ஏஞ்சலா மெர்க்கல், இன்றுடன் தன் சேன்ஸலர் பதவிலிருந்து விடைபெறுகிறார்.
ஜேர்மன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 395 பேரில் 303 பேர், மெர்க்கலின் முன்னாள் நிதி அமைச்சரான Olaf Scholz (63) என்பவருக்கு ஆதரவாக வாக்களிக்க, அவர் இன்று புதிய ஜேர்மன் சேன்ஸலராக தேர்வு செய்யப்பட்டார்.
தனது 16 ஆண்டு கால ஆட்சிக்காலத்தில் ஜேர்மனியை சீரமைத்தது மட்டுமல்ல, ஐரோப்பாவுக்கும் மொத்த உலக நாடுகளுக்குமிடையில் ஒரு நல்ல உறவை ஏற்படுத்தியிருந்தார் மெர்க்கல்.
ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலர் மட்டுமல்ல, நான்கு அமெரிக்க அதிபர்கள், ஐந்து பிரித்தானிய பிரதமர்களை தனது ஆட்சிக் காலத்தில் பார்த்தவர் என்ற பெருமைக்குரியவர், 67 வயதாகும் மெர்க்கல்.
ஐரோப்பாவின் தலைமையகமாக, பொருளாதார வலிமை படைத்த நாடாக, உலகின் மீது குறிப்பிடத்தக்க அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நாடாக கருதப்பட்ட ஜேர்மனியில் மெர்க்கலின் பிரியாவிடை, ஒரு சகாப்தத்தை முடிவுக்கு கொண்டுவந்திருக்கிறது.
கிழக்கு ஜேர்மனியில், ஒரு போதகரின் மகளாக பிறந்தவர் ஏஞ்சலா. பின்னர் ஒரு இயற்பியலாளாராகி, பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபின் அரசியல் வாழ்வில் கால் எடுத்துவைத்தார் அவர்.
Helmut Kohl என்பவர் ஜேர்மன் சேன்ஸலராக இருக்கும்போது, அவரது அமைச்சரவையில் கிழக்கு ஜேர்மனியைச் சேர்ந்த அர்சியல்வாதிகள் யாருமில்லை என்பதற்காக, அந்த இடத்தை நிரப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஏஞ்சலா.
அப்போது, அவர் ஜேர்மனியின் முதல் பெண் சேன்ஸலராவார் என யாரும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
படபடவென ஐரோப்பா முழுவதும் மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவிய ஏஞ்சலாவின் புகழ், அவர் சிரிய அகதிகளுக்கு தன் நாட்டைத் திறந்துவிட்டபோது உலக அளவில் பெரிதும் பேசப்பட்டது.
ஆனால், ஜேர்மனியிலோ அதற்கு எதிர்ப்பு உருவானது.
சிரியாவிலிருந்து அகதிகள் என்ற போர்வையில் ஜிகாதிகளும், பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வதற்காக வந்த சந்தர்ப்பவாதிகளும் ஜேர்மனிக்குள் நுழைந்தார்கள்.
2015ஆம் ஆண்டு, புத்தாண்டுக்கு முந்தைய தினம் 1,200 பெண்கள் பாலியல் தாக்குதலுக்குள்ளானார்கள். பலர் வன்புணரப்பட்டார்கள். அந்த தாக்குதல்களுக்கு காரணமானவர்களில் பாதிக்கும் மேல் அந்த ஆண்டில் அகதிகளாக வந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஆகவே, அதைத் தொடர்ந்து வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல் வெடித்தது.
அதுபோக, கொரோனா பரவத் தொடங்க, முதலில் மற்ற நாடுகளை விடவும் சாமர்த்தியமாக அதைக் கையாண்ட ஜேர்மனியில் பிறகு கொரோனா பரவல் கைமீறிப்போக, அத்துடன் பெருவெள்ளம் ஒன்று வந்தபோது அதை சரியாக அரசு கையாளவில்லை என மக்கள் கோபமடைய, மெர்க்கலின் செல்வாக்கு குறையத் தொடங்கியது.
ஆனால், யாரும் எதிர்பாராதவிதமாக தனது 16 ஆண்டு கால ஜேர்மன் சேன்ஸலர் பதவியையும், கட்சித் தலைமைப் பொறுப்பையும் துறக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தார் ஏஞ்சலா.
அதன்படி, இன்று தன் அரசியல் வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டுள்ளார் மெர்க்கல்.
30 ஆண்டு கால அரசியல் வாழ்வுக்குப் பின் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டால், கொஞ்சம் படிக்கவேண்டும், கொஞ்சம் தூங்கவேண்டும் என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.