512 கிலோ வெங்காயத்தை 70 கி.மீ பயணம் செய்து விற்ற விவசாயி! 2 ரூபாய்க்கு கிடைத்த காசோலை இணையத்தில் வைரல்
மகாராஷ்டிராவில் 512 கிலோ வெங்காயத்தை 70 கி.மீ பயணம் செய்து விற்ற விவசாயிக்கு மிஞ்சியது போக கிடைத்த 2 ரூபாய் காசோலையை, இணையத்தில் பதிவிட்ட விவசாயிக்குப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
70 கி.மீ பயணித்த விவசாயி
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள நாசிக், சோலப்பூர், புனே போன்ற மாவட்டங்களில் வெங்காயம் அதிக அளவில் பயிர் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அந்த பகுதிகளில் வெங்காய உற்பத்தி அதிகரித்திருக்கிறது.
இதனால் வெங்காயத்தின் விலை அடிமட்டத்திற்குக் குறைந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டம் பார்சி எனும் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திர துகாராம் சவான் என்ற விவசாயி, தனது தோட்டத்தில் விளைந்த 512 கிலோ வெங்காயத்தை 70 கி.மீ தொலைவிலிருக்கும் சோலாப்பூர் மார்க்கெட்டுக்கு கொண்டு சென்றுள்ளார்.
அங்கு சூர்யா டிரேடர் என்ற கமிஷன் கடையில் தன்னுடைய வெங்காயத்தை விற்பனைக்குச் செய்து தரும்படி கொடுத்துள்ளார்.
2 ரூபாய்க்கு காசோலை
சவான் கொடுத்த வெங்காயத்தின் விலை கிலோ 1 ரூபாய்க்கு தான் விற்பனையாகியிருக்கிறது என்றிருக்கிறார்கள். மேலும் கிடைத்த 512 ரூபாயில் கமிஷன், இறக்கு கூலி, வெங்காயத்தை எடை போடுவதற்கான கட்டணம் என எல்லாம் சேர்த்து, மொத்தம் 509.50 பிடித்தம் செய்து வெறும் 2 ரூபாய்க்கு காசோலை கொடுத்துள்ளார்.
அதுவும் காசோலை செலுத்தி 15 நாட்கள் கழித்து தான் பணமெடுக்க முடியும் எனக் கூறியுள்ளார். இதனால் விவசாயி அதிக மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். விவசாயிக்கு வழங்கப்பட்ட காசோலை சமூக வளைதளத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது.
உரம், பூச்சி மருந்து விலையேற்றம்
வெங்காயம் இந்த நிலையில் விற்பனை ஆனால் விவசாயிகள் தற்கொலை செய்யாமல் என்ன செய்வார்கள் என்றும், அரசு வெங்காயத்தை அதிக அளவு ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் அதனால் தான் இதற்குத் தீர்வு உண்டாகுமென்றும் கூறியுள்ளார்.
இது குறித்து சவான் பேசுகையில், 'கடந்த ஆண்டு ரூபாய் 20க்கு விற்ற வெங்காயம் தற்போது ஒரு ரூபாய்க்கு விற்கிறது. ஆனால் நான் பயிரிடுவதற்கு மட்டும் 40 ஆயிரம் ரூபாய் செலவிட்டேன். மேலும் உரம், பூச்சி மருந்து போன்றவற்றின் விலை இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் வெங்காயத்தின் விலை குறைந்து கொண்டே போகிறது' என வருத்தம் தெரிவித்துள்ளார்.