இளவரசர் ஹரியால் தொழில், குடும்ப வாழ்க்கை பாதிக்கலாம்: கவலையில் நெருங்கிய நண்பர்கள்
நான்கு புத்தகங்களில் தமது இதுவரையான வாழ்க்கை அனுபவங்கள் குறித்து வெளிப்படையாக பேசவிருக்கும் இளவரசர் ஹரியால், அவரது பள்ளி மற்றும் ராணுவ நண்பர்கள் கவலையில் உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் தங்கள் தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகும் ஆபத்து இருப்பதாக அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இளவரசர் ஹரி, தமது நெருங்கிய நண்பர்கள் தமக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என பள்ளி, கல்லூரி நாட்களில் இருந்தே கோரியிருந்தார்.
இதனால், நண்பர்களிடையே நடந்தேறும் நிகழ்வுகள் எதுவும் பொதுவெளியில் இதுவரை வெளியானதும் இல்லை. ஆனால், அமெரிக்காவில் குடியேறிய பின்னர், இளவரசர் ஹரி மொத்தமும் உடைத்து பேசும் நபராக மாறியுள்ளார்.
அரண்மனை ரகசியங்கள் கூட இளவரசர் ஹரியால் பலமுறை அம்பலமாகி, அது உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையிலேயே இளவரசர் ஹரி தமது வாழ்க்கை அனுபவங்களை 4 புத்தகங்களாக வெளியிட இருப்பதான தகவல் வெளியாகியுள்ளது.
முதல் புத்தகம் அடுத்த ஆண்டும், இரண்டாவது புத்தகம் ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பின்னரும், ஒரு புத்தகம் ஹரியின் மனைவி மெர்க்கல் எழுதுவார் எனவும், நான்காவது புத்தகம் தொடர்பில் ரகசியம் காக்கப்படுகிறது.
தமது புத்தகத்தில் நண்பர்கள் தொடர்பில் அவர் வெளிப்படையாக பேசினால், அது உண்மையில் தங்கள் வாழ்க்கையை சீர்குலைக்கும் என இளவரசர் ஹரியின் நண்பர்கள் கவலை கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி, எதற்கும் தயார் என சிலர் கூறியதாகவும், இளவரசர் ஹரிக்கு தேவையான பதில் தங்கள் வசம் இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
இளவரசர் ஹரியின் புத்தகங்கள் தொடர்பான அறிவிப்பு, அவரது குடும்ப உறுப்பினர்களை மட்டுமல்ல தற்போது அவரது பள்ளி, கல்லூரி மற்றும் ராணுவ நண்பர்களையும் கவலை கொள்ள வைத்துள்ளது.