8 பேர் படுகொலைக்கு காரணமான நபர்... பெயர், அடையாளத்தை வெளியிட்ட பொலிசார்
அமெரிக்காவின் FedEx மையத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பொலிசர் அடையாளம் கண்டுள்ளதுடன், அவர் ஏற்கனவே பொலிஸ் கண்காணிப்பில் இருந்தவர் என தெரிய வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை எஃப்.பி.ஐ அதிகாரிகள் குறித்த நபரின் குடியிருப்பில் சோதனை மேற்கொண்ட பின்னர் சந்தேக நபரை 19 வயது பிராண்டன் ஸ்காட் ஹோல் என்று பொலிஸ் தரப்பு அடையாளப்படுத்தியுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு முன்னர் அவரது வன்முறை சாத்தியம் குறித்து அந்த இளைஞரின் குடும்பத்தினர் அதிகாரிகளை எச்சரித்ததாக கூறப்படுகிறது.
சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே துப்பாக்கியால் கண்மூடித்தனமாக தாக்கியதாக நேரடி சாட்சி ஒருவர் தெரிவித்துள்ளார்.
FedEx மையத்தில் இரவு நேரப் பணியாளர்கள் தங்களது வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். அப்போது பிராண்டன் ஸ்காட் ஹோல் கையில் துப்பாக்கியுடன் நிறுவனத்துக்குள் நுழைந்து அங்கிருந்த நபர்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.
இதனால் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பதற்றமும், பீதியும் உருவானது. அவர்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கும் இங்குமாக ஓட்டம் பிடித்தனர்.
சுமார் 2 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த கோர சம்பவத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
இதனிடையே இந்த தாக்குதல் குறித்த தகவல் கிடைத்ததும் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய அந்த இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு பொலிசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் ஒருவரது நிலைமை சற்று கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.