பிரித்தானியாவில் புறாவுக்கு தீனி வைத்து சிக்கிய இந்திய மாணவன்
மான்செஸ்டர் பகுதியில் பரிதாபப்பட்டு புறாவுக்கு தீனி வைத்த மாணவருக்கு குப்பை கொட்டியதாக கூறி அமலாக்க அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சால்ஃபோர்ட் பல்கலைக்கழ மாணவரான ரிஷி பிரேம் என்பவரே புறாவுக்கு தீனி வைத்ததன் பேரில் அபராதம் விதிக்கப்பட்டவர்.
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயது ரிஷி பிரேம், சம்பவத்தன்று பகல் 11.30 மணியளவில் Piccadilly பூங்காவில் உள்ள ஒரு பெஞ்சில் அமர்ந்திருந்துள்ளார்.
இந்த நிலையில் அவரைச் சுற்றி புறாக்கள் வந்தமர, பரிதாபப்பட்டு தாம் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவில் ஒரு துண்டை புறாக்களுக்கு தீனியாக வைத்துள்ளார்.
அதில் சில பகுதி நடைபாதையில் விழுந்துள்ளது. இதை கவனித்துக்கொண்டிருந்த அமலாக்க அதிகாரி ஒருவர், நடந்த சம்பவத்தை விளக்கியும் கருத்தில் கொள்ளாமல் 150 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளார்.
பொதுவாக இந்தியாவில் புறாக்களுக்கு தீனி வைப்பது வழக்கம் என்பதால், தாமும் அதையே செய்ததாக ரிஷி விளக்கமளித்துள்ளார். இருப்பினும் மான்செஸ்டர் நகர சபை அந்த விளக்கங்களை ஏற்க மறுத்துள்ளதுடன், புறாக்களுக்கு மக்கள் தீனி வைப்பதை தடை செய்துள்ளதாகவும், அது குப்பை கொட்டுவதற்கு சமானம் என வாதிட்டுள்ளனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவரால் அந்த தொகையை உடனே செலுத்த முடியவில்லை என கூறப்படுகிறது. மட்டுமின்றி, தற்போதைய சூழலில், இந்தியாவில் உள்ள குடும்பத்தினரிடம் அந்த தொகையை அனுப்பி வைக்க கோர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் தமது நிலை அறிந்து பல்கலைக்கழக நிர்வாகம் தமக்கு உதவ முன்வந்துள்ளதாகவும், அதனால் அபராதத்தை செலுத்த முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் புறாவுக்கு பரிதாபப்பட்டு தீனி வைத்ததால், அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தம்மை வெகுவாக பாதித்துள்ளது என்றார் ரிஷி பிரேம்.