லண்டனை உலுக்கிய ஆசிரியை விவகாரம்: நூற்றுக்கணக்கானோர் குவிந்து கண்ணீர் அஞ்சலி
லண்டனில் 28 வயதான ஆசிரியை ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குவிந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
இதுபோன்ற வன்முறைகளுக்கு எதிராக அரசாங்கம் உறுதியான நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறித்த கண்ணீர் அஞ்சலி கூட்டத்தில், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை உறவினர் கண்ணீருடன் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, அஞ்சலி கூட்டத்தில் திரண்டிருந்த 500கும் மேற்பட்ட மக்களிடம், குற்றவாளியை கைது செய்ய எங்களுக்கு உதவுங்கள் என விசாரணை அதிகாரி Trevor Lawry கேட்டுக்கொண்டார்.
செப்டம்பர் 17ம் திகதி தமது குடியிருப்பில் இருந்து விடுதி ஒன்றிற்கு, நண்பர் ஒருவரை சந்திக்கும் பொருட்டு சென்றுள்ளார் 28 வயதான அந்த ஆசிரியை. ஆனால் அவரது சடலமானது பூங்கா ஒன்றில் அடுத்த நாள் மதிய நேரம் கண்டெடுக்கப்பப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆனால் விசாரணைக்கு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். தற்போது உண்மையான குற்றவாளியை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் பொலிசார் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர்.
இதனிடையே, இந்த கொரோனா தொற்று காலகட்டத்தில் ஓராண்டில் மட்டும் பிரித்தானியா முழுவதும் 180 பெண்கள் ஆண்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மேயம் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.
லண்டனில் கொந்தளிப்பை ஏற்படுத்திய சாரா எவரார்ட் கொலை வழக்கு போன்றே தற்போதும் நிகழ்ந்துள்ளது. 33 வயதான சாரா எவரார்ட் கடந்த மார்ச் மாதத்தில் தமது குடியிருப்புக்கு திரும்பும் வழியில் திடீரென்று மாயமானார்.
இந்த வழக்கில் சாரா எவரார்டை கடத்தி, வல்லுறவுக்கு இரையாக்கி கொலை செய்ததை காவல்துறை அதிகாரி ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார். எதிர்வரும் வாரத்தில் குறித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிரான தீர்ப்பு வெளியாகும் என்றே நம்பப்படுகிறது.
இதனிடையே, கொல்லப்பட்ட ஆசிரியை சபீன நெஸ்ஸா தொடர்பில் உருக்கமான இரங்கல் தகவலை வெளியிட்டுள்ளார் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன். பிரதமர் போரிஸ் ஜான்சனும் ஆசிரியை சபீனாவின் உறவினர்களுக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.