விலைவாசி உயர்வால் அவதியுறும் தொழிலாளர்களுக்கு ஜேர்மனி அரசு வழங்கும் நிதி உதவி
விலைவாசி உயர்வால் அவதியுறும் தொழிலாளர்களின் பளுவை எளிதக்கும் வகையில், ஜேர்மனி அரசு அவர்களுக்கு நிதி உதவி ஒன்றை வழங்க உள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு பணியில் இருக்கும் தொழிலாளர்களுக்கு, அவர்களுக்கு பணி வழங்குவோர், இந்த ஆண்டு இறுதி வாக்கில் ஒரு தொகையை வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சுய தொழில் செய்வோருக்கும் இந்த நிதி உதவி உண்டு. ஆனால், நிதி உதவி பெறுவோர் தாங்கள் பெறும் தொகைக்கு வரி செலுத்தவேண்டும்.
யாருக்கெல்லாம் இந்த நிதி உதவி?
வரி செலுத்துவதில் முதல் ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும், அவர்கள் 2022இல் பணியில் இருக்கும் பட்சத்தில், இந்த நிதி உதவி உண்டு.
எவ்வளவு வழங்கப்பட உள்ளது?
2022ஆம் ஆண்டு இறுதிக்குள், பணியிலிருப்போருக்கு, 300 யூரோக்கள் வழங்கப்பட உள்ளது.
இது குறித்து தெரிவித்த The SPD கட்சியின் நாடாளுமன்ற குழு, 44 மில்லியன் தொழிலாளர்கள் விரைவாக, எளிதாக இந்த நிதி உதவியைப் பெற இருப்பதாக தெரிவித்துள்ளது.
எப்போது இந்த தொகை வழங்கப்படும்?
செப்டம்பர் மாத ஊதியத்துடன் இந்த தொகையை பணி வழங்குவோர் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கவேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஓய்வு பெற்றோருக்கு இந்த நிதி உண்டா?
ஓய்வு பெற்றவர்கள் 2022இல் பணியில் இல்லாத நிலையில், அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடையாது. ஆனாலும், அவர்கள் 2022இல் குறுகிய காலம் பணி செய்திருந்தால் கூட அவர்களுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.