தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு வேலை பறிபோகும்... பாடசாலை ஒன்றின் திடீர் அறிவிப்பு: தீயாக பரவிய சம்பவம்
அமெரிக்காவில் தனியார் பாடசாலை ஒன்று கொரோனா தடுப்பூசி தொடர்பில் தங்கள் ஆசிரியர்களுக்கு அனுப்பிய கடிதம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள தனியார் பாடசாலை ஒன்றே தடுப்பூசி தொடர்பில் விசித்திரமான கடிதம் ஒன்றை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளது.
குறித்த கடிதத்தில், ஏற்கனவே கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மாணவர்களை நேரடியாக அணுகுவதை தவிர்க்க வேண்டும் எனவும்,
இந்த கல்வி ஆண்டுக்குள் தடுப்பூசி எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கும் ஆசிரியர்கள், அந்த முடிவை பாடசாலை நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும்,
மேலதிக தகவல் கிடைக்கப்பெறும் வரையில், மாணவர்கள் பக்கம் அந்த ஆசிரியர்களை நெருங்க விடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கோடையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட எவரும் பள்ளிக்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், அவர்களின் வேலைக்கு உத்தரவாதம் தர முடியாது எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, தடுப்பூசி எடுத்துக்கொண்டதை பாடசாலை நிர்வாகத்திடம் இருந்து மறைத்து வைக்க முயன்றாலும், அவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது மாணவர்களின் நலம் கருதி முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
Centner Academy என்ற அந்த தனியார் பாடசாலையின், தடுப்பூசி தொடர்பான கடிதம் தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, குறித்த பாடசாலையின் இணை நிறுவனர்கள் லீலா மற்றும் டேவிட் சென்ட்னர் ஆகிய இருவரும் தடுப்பூசிக்கு எதிரானவர்கள் எனவும்,
குடியரசுக்கட்சி ஆதரவாளர்கள் என்றும் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் தீவிர விசிரிகள் எனவும் கூறப்படுகிறது.