தடுப்பூசி கட்டாயம் என்ற மருத்துவமனை நிர்வாகம்: ஊழியர்கள் எடுத்த முடிவால் அதிர்ச்சி
அமெரிக்காவில் முக்கிய மருத்துவமனை நிர்வாகம் ஒன்று தடுப்பூசி கட்டாயம் என அறிவித்த நிலையில் 150கும் மேற்பட்ட ஊழியர்கள் ராஜினாமா செய்து வெளியேறியுள்ளனர்.
ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தங்கள் ஊழியர்கள் அனைவரையும் ஜூன் 21ம் திகதிக்கு முன்னர் தடுப்பூசி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.
மட்டுமின்றி தவறினால் ஒப்பந்தம் ரத்தாகும் சூழல் உருவாகும் எனவும் எச்சரித்துள்ளது. ஆனால் Baytown பகுதியில் பணியாற்றும் 200 ஊழியர்களில் 153 ஊழியர்கள் தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன் நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதில் 117 ஊழியர்கள் நீதிமன்றத்தை நாடியதுடன், நாஜி நாட்களுடன் ஒப்பிட்டு, தடுப்பூசி விவகாரத்தில் தங்களுக்கு விலக்கு வேண்டும் என வாதிட்டனர்.
ஆனால் ஊழியர்களின் புகார் மனுவை நிராகரித்த நீதிமன்றம், தற்போதைய சூழலில் தடுப்பூசி கட்டாயம் என்பது தவிர்க்க முடியாதது என சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் ஹூஸ்டன் மெதடிஸ்ட் மருத்துவமனை நிர்வாகம் தங்களின் 300 சுகாதார மையங்களில் பணியாற்றும் 25,000 ஊழியர்களும் தடுப்பூசி பெற்றுக்கொள்ள அறிவுறுத்தியதுடன், ஜூன் 7ம் திகதி இறுதி நாள் எனவும் தெரிவித்தது.
இதனையடுத்து 24,947 ஊழியர்கள் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். 178 ஊழியர்கள் தடுப்பூசிக்கு மறுப்பு தெரிவிக்க, அவர்கள் ஊதியம் இன்றி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அதில் சிலர் பின்னர் தடுப்பூசி பெற ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது 153 ஊழியர்கள் புதிய வேலை தேடும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
முன்னதாக 285 ஊழியர்கள் மருத்துவம் சார்ந்த அல்லது மத ரீதியான காரணங்களால் தடுப்பூசி பெறுவதில் இருந்து விலக்கு பெற்றனர்.
மேலும் 332 ஊழியர்களுக்கு கர்ப்பம் அல்லது பிற காரணங்களுக்காக தடுப்பூசி பெறுவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.