மரணதண்டனையை நிறைவேற்ற புதிய திட்டம்: அமெரிக்காவில் இது நான்காவது மாகாணம்
அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்தில் இனி சிறைச்சாலைகளில் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரணதண்டனையை நிறைவேற்ற விஷ ஊசிகளின் தட்டுப்பாடு காரணமாகவே தென் கரோலினா மாகாண நிர்வாகம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டுமா அல்லது மின்சார இருக்கையில் வைத்து தண்டனனையை நிறைவேற்ற வேண்டுமா என்ற கேள்விக்கு 66 வாக்குகள் துப்பாக்கியால் சுட்டு தண்டனையை நிறைவேற்றவே என பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் இன்னமும் மரணதண்டனையை நிறைவேற்ற மின்சார இருக்கைகளை பயன்படுத்திவரும் 9 மாகாணங்களில் ஒன்று தென் கரோலினா.
இந்த நிலையில் தற்போது துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனையை நிறைவேற்றும் நான்காவது மாகாணமாக மாறியுள்ளது தென் கரோலினா.
தென் கரோலினா மாகாணத்தை பொருத்தமட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே கடைசியாக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. விஷ ஊசிகளின் தட்டுப்பாடு காரணமாக பல சிறைகளில் மரணதண்டனை நிறைவேற்றப்படாமலே உள்ளது.
மரணதண்டனைப் பட்டியலில் உள்ள 37 கைதிகளில் மூவர் மேல்முறையீட்டுக்கு வெளியே உள்ளனர். இதனால், முதற்கட்டமாக இவர்கள் மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1912 முதலே தென் கரோலினா மாகாணம் மரணதண்டனை நிறைவேற்ற மின்சார இருக்கைகளையே பயன்படுத்தி வருகிறது. அதற்கு முன்னர் தூக்கிலிட்டு தண்டனையை நிறைவேற்றி வந்துள்ளனர்.
தற்போது மிசிசிப்பி, ஓக்லஹோமா மற்றும் உட்டா மாகாணங்களின் வரிசையில் தென் கரோலினா மாகாணமும் துப்பாக்கியால் சுட்டு மரணதண்டனையை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.