உலகிலேயே இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட்ட முதல் நபர்: அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா?
சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த சிறுமியை அடிமையாக வைத்திருந்து, கொதிக்கும் வெயிலில் நாயைப் போல சங்கிலியால் கட்டிப்போட்டு, தண்ணீர் கொடுக்காமல் சாக விட்ட ஒருவர், உலகிலேயே இனப்படுகொலைக்காக தண்டிக்கப்பட்ட முதல் நபராகியுள்ளார்.
இன்னமும், உலகின் ஏதாவது ஒரு பகுதியில், ஒரு இனத்தவர்கள் மற்றவர்களை கொடுமைப்படுத்துவதும், அவர்கள் சார்ந்த இனத்தின் அடிப்படையில் அவர்களை அழித்தொழிக்க விழைவதும், அடிமைகளாக வைத்திருக்க முயல்வதும் வேதனைக்குரிய விடயம்தான்.
அவ்வகையில், ஈராக்கில் வாழும் யாஸிடி என்ற இனத்தைச் சேர்ந்தவர்களை ஐ எஸ் அமைப்பினர் அழித்தொழிக்க விழைந்தனர். சுமார் 5,000 ஆண்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், 7,000 பெண்களும் சிறுமிகளும் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள்.
அப்படி நோரா என்ற ஒரு யாஸிடி இனப்பெண்ணையும் அவரது மகளையும் அடிமைகளாக வாங்கியவர்கள்தான் ஜேர்மனியைச் சேர்ந்த Jennifer Wenisch என்ற பெண்ணும், அவரது கணவரான ஈராக்கைச் சேர்ந்த Taha Al-Jumailly (29) என்ற நபரும்.
Jennifer, ஐ எஸ் அமைப்பில் சேருவதற்காக ஜேர்மனியிலிருந்து சென்றவர் ஆவார். பிறகு, தம்பதியர் ஈராக்கில் வாழ்ந்துவந்த நிலையில், ஒரு நாள் உடல் நலமில்லாத அந்த சிறுமி, நோராவின் மகள், படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டிருக்கிறாள்.
உடனே, அவளை 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலில் நாய்ச் சங்கிலியால் கட்டிப்போட்டிருக்கிறார் Taha. தாகத்தால் தவித்து அந்தக் குழந்தை, தண்ணீர் தண்ணீர் என கதறியும், அவளுக்கு தண்ணீர் கூட கொடுக்கப்படவில்லையாம்.
ஏற்கனவே உடல் நலமில்லாதிருந்த அந்தக் குழந்தை, தாகத்தில் தவித்து உயிரிழந்துவிட்டாள். இந்தக் கொடுமையை Jenniferம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார்.
Jennifer ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுவிட்ட நிலையில், Taha மீதான வழக்கு நடைபெற்று வந்தது.
தற்போது, Tahaவுக்கும் நேற்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், Taha மீது, இனப்படுகொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. மரணத்தை விளைவித்த மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள், போர்க்குற்றங்களுக்கு உதவியது, உடலுக்கு ஊறு விளைவித்து மரணத்தை ஏற்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆக, Taha உலகிலேயே இனப்படுகொலைக் குற்றங்களுக்காக தண்டிக்கப்படும் முதல் மனிதர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பைக் கேட்ட Taha, நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்!