ஜேர்மனியில் கொட்டித்தீர்த்த மழை...20 பேர் பலி 70 பேர் மாயம்: வீடுகளின் கூரைகளில் தஞ்சமடைந்துள்ள மக்கள்
ஜேர்மனியில் மூன்று மாதங்களில் பெய்யவேண்டிய மழை மூன்றே மணி நேரத்தில் கொட்டித்தீர்த்ததில், 20 பேர் பலியாகியுள்ளதுடன் 70 பேர் காணாமல் போயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாலைகள் வெள்ளக்காடாக, சில இடங்களில் சாலைகளும், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த கார்களும், சில இடங்களில் வீடுகளும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
வெள்ளம் சூழந்த வீடுகளின் கூரைகளில் 50 பேர் வரை மீட்கப்படுவதற்காக காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
Cologneக்கு அருகிலுள்ள Eifel பகுதியில் சாலைகளில் நதி போல் வெள்ளம் ஓட, அப்பகுதி மற்ற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. Altena என்ற நகரில் மக்களை மீட்கச் சென்ற தீயணைப்புவீரர் ஒருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க, மற்றொருவர் Werdohl-Elverlingsen என்ற பகுதியில் மீட்புப்பணியின்போது நிலைகுலைந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
Ahrweiler என்ற இடத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன், மழையில் ஆறு வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அதில் 50 பேர் வரை காணாமல் போயிருக்கிறார்கள்.
மழையால் பாதிக்கப்பட்டுள்ளது ஜேர்மனி மட்டுமல்ல, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்தும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.