பற்றியெரிந்த அடுக்குமாடி குடியிருப்பு... சடலமாக மீட்கப்பட்ட நபர்: வெளியான முதல் புகைப்படம்
கிளாஸ்கோ நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று தீ விபத்தில் சிக்கிய சம்பவத்தில் பலியான நபரின் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை கிளாஸ்கோ பகுதியில் அமைந்துள்ள மூன்று மாடி குடியிருப்பு கட்டிடம் தீக்கிரையானது. இச்சம்பவத்தை அடுத்து புதன்கிழமை 48 வயதான ராகுல் தாக்கூர் என்பவர் சடலமாக மீட்கப்பட்டார்.
இந்த நிலையில் தீ விபத்து தொடர்பில் 53 வயதான நபரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அந்த குடியிருப்பில் இருந்து 15 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உடை மற்றும் அத்தியாவசிய பொருட்களை அளிப்பதற்காக உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை சுமார் 1.30 மணியளவில் Pollokshields பகுதியில் அமைந்துள்ள இந்த மூன்று மாடி குடியிருப்பு தீ விபத்தில் சிக்கியது.
தகவல் அறிந்து 9 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் போராடி நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், குடியிருப்புக்குள் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை உறுதி செய்தனர்.
இந்த விவகாரத்தில் கைதான நபர் தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர்.
மேலும் முதலமைச்சர் Nicola Sturgeon தொகுதி இது என்பதால், தேவைப்படும் உதவிகள் செய்யப்படும் என அறிவித்துள்ளார்.