விமானத்தில் வெடிகுண்டு? அயர்லாந்திலிருந்து போலந்து நோக்கி சென்ற விமானம் திடீரென ஜேர்மனியில் தரையிறங்கியதால் பரபரப்பு
அயர்லாந்திலிருந்து போலந்து நோக்கி சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று அவசரமாக ஜேர்மனியில் தரையிறங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
160 பயணிகளுடன் அயர்லாந்திலிருந்து போலந்து நோக்கி சென்றுகொண்டிருந்த அந்த Ryanair நிறுவன விமானம், நேற்று இரவு 8 மணியளவில் பெர்லினில் தரையிறங்க அனுமதி கோரியதைத் தொடர்ந்து, தரையிறக்கப்பட்டது.
உடனடியாக விமானத்தை சூழந்துகொண்ட ஜேர்மன் பெடரல் பொலிசார், மோப்ப நாய்கள் உதவியுடன் விமானத்திற்குள் ஏறி சோதனை மேற்கொண்டார்கள்.
விமானத்தில் அபாயம் எதுவும் இல்லை என்பதை அவர்கள் உறுதி செய்தாலும், அந்த விமானத்திலிருந்த பயணிகள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு அதிகாலை 4 மணிக்கு மாற்று விமானம் ஒன்றில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
எதற்காக திடீரென விமானம் தரையிறக்கப்பட்டது என்பது குறித்து அதிகாரிகள் எந்த தகவலும் கூறவில்லை. ஆனால், அந்த விமானத்தில் வெடிகுண்டு இருந்ததாக தகவல் கிடைத்ததையடுத்தே அது அவசரமாக ஜேர்மனியில் தரையிறக்கப்பட்டதாக Bild பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.