பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜேர்மனி: உதவ ஓடி வந்த அகதிகள்
சென்ற மாதம் பெருவெள்ளத்தால் பயங்கரமாக பாதிக்கப்பட்டு 180 பேரை பலிகொடுத்த ஜேர்மனிக்கு உதவுவதற்காக அங்கு வாழும் சிரிய அகதிகள் பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜேர்மன் நகரங்களை சுத்தம் செய்ய உதவியவர்களில் சிரிய அகதிகளும் அடக்கம்.
சமூக ஊடகங்களில் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் கண்ட சிரிய அகதிகள் நூற்றுக்கணக்கானோர், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தன்னார்வலர்களாக பணியாற்ற ஓடோடிச் சென்றுள்ளனர்.
குப்பைகளை அகற்றுவது முதல், நூற்றாண்டுகள் பழமையான தேவாலயம் ஒன்றை புதுப்பித்தல் வரை பல பணிகளை இந்த சிரிய அகதிகளின் தன்னார்வலர்கள் குழு மேற்கொண்டுள்ளது.
ஜேர்மனியில் ஒரு மில்லியன் சிரிய அகதிகள் இருக்கிறோம் என்று கூறும் தன்னார்வலர் அமைப்பு ஒன்றின் அமைப்பாளரான Barakat Oubaid என்பவர், நல்லது நடந்தாலும் சரி, கெட்டது நடந்தாலும் சரி, ஜேர்மன் மக்களோடு மக்களாக நாங்களும் கூட இருக்கிறோம் என்கிறார்.
இந்த தன்னார்வலர்களில் பலர், 2015இல் போருக்குத் தப்பி சிரியாவிலிருந்து ஓடிவந்தபோது ஜேர்மனி கரம் நீட்டி ஏற்றுக்கொண்ட அகதிகளாவர்
ஜேர்மனியிலுள்ள பல வீடுகள் நாசமாகிவிட்டன, எங்கள் வீடும் அவற்றில் ஒன்று என்று கூறும் Mouaiad Abedelbi என்ற சிரிய தன்னார்வலர், Ahrweiler என்ற இடத்தில் வாந்துவருகிறார்.
இப்போது இந்த பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன உணர்கிறார்களோ, அதையேதான் நாங்களும் உணர்கிறோம் என்று கூறும் அவர், சொல்லப்போனால் நாங்கள் மீண்டும் ஒரு முறை அதை உணர்ந்துள்ளோம் என்கிறார்.
என்றாலும், நாங்கள் மற்றவர்களுக்கு உதவத்தான் இங்கே இருக்கிறோம், ஜேர்மானியர்களுடன் கையோடு கை சேர்த்து எல்லாவற்றையும் பழுது பார்ப்பதற்காக நாங்கள் வேலை செய்வோம், என்ன நடந்தாலும் சரி, உதவிக்கு நாங்கள் இருக்கிறோம் என்கிறார் அவர்.
வீடியோவை காண - https://www.aljazeera.com/news/2021/8/5/syrian-refugees-help-flood-victims-in-germany-2