தமிழகத்தில் உள்ள உணவகங்கள், டீ கடைகளுக்கு எச்சரிக்கை- உணவு பாதுகாப்புத் துறை
சமீப நாட்களாக உணவகங்களில் சாப்பிடுவோருக்கு உடல்நலக் குறைவு ஏற்படுவது என்பது தொடர்கதையாகி வருகிறது.
உணவு பாதுகாப்புத் துறையும் அவ்வபோது உணவகங்கள் பேக்கிரிகளில் சோதனை செய்து வருகிறது.
சோதனையில் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் காலாவதியான தின்பண்டங்கள், பழைய இறைச்சி உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்து அழித்தனர்.
இந்நிலையில், தரமான உணவுகள் பொதுமக்களுக்கு கிடைக்கும் நோக்கில், உணவு பாதுகாப்பு துறை சார்பில் 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளியிட்ட நெறிமுறை
அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
அனைத்து உணவு வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு டைபாய்டு மற்றும் மஞ்சள் காமலை உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தி, மருத்துவத் தகுதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
உணவு வணிக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் தண்ணீரை பகுப்பாய்வு செய்து, பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும்.
உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மொய்க்காத வண்ணம் கண்ணாடி பெட்டியில் மூடி வைத்து, காட்சிபடுத்த வேண்டும்.
உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே சமைக்கப் பயன்படுத்த வேண்டும். மீதமான பயன்படுத்திய உணவு எண்ணெயை FSSAI அங்கீகரித்த கொள்முதலாளருக்கும் மட்டும் விற்க வேண்டும்.
விற்பனையாகாமல் மீதமான உணவை நுகர்வோருக்கு வழங்காமல் அப்புறப்படுத்திட வேண்டும்.
செய்தித்தாள் போன்ற அச்சிடப்பட்ட காகிதங்களில் உணவுப் பொருட்களை பரிமாறக் கூடாது.
அனுமதிக்கப்படாத பிளாஸ்டிக்கில் உணவுப் பொருட்களை சூடாகவோ அல்லது இயல்பு நிலையிலோ பொட்டலமிடக்கூடாது.
உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை அல்லது அனுமதிக்கப்பட்ட அலுமினியம் பாயில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
எவ்வகை உணவு எண்ணெய்களையும் லேபிள் விபரங்களின்றியும் பொட்டலமிடாமல் சில்லறை அடிப்படையில் நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.
உணவைக் கையாளுபவர்கள் கையுறை மற்றும் தலைமுடி கவசம் போன்றவற்றைத் தவறாமல் அணிய வேண்டும்.
பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களை கொள்முதல் விற்பனை செய்யும் போது, FSSAI உரிம எண்ணுடன் கூடிய முழுமையான லேபிள் விபரங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
உணவு சமைக்க மற்றும் நொறுக்குத் தீனிகள் தயாரிக்க அயோடின் கலந்த உப்பு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
சிக்கன் பகோடா, பஜ்ஜி, கோபி மஞ்சூரியன் உள்ளிட்ட உணவு வகைகளில் செயற்கை நிறமிகளை கண்டிப்பாக சேர்க்கக் கூடாது.
வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றால், கடையின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், உணவு வணிகர்கள் அனைவரும் இவ்வறிவிப்பைக் கண்ட 14 தினங்களுக்குள் மேற்கூறியவற்றை தவறாது பின்பற்றிட வேண்டுமென அறிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |