வெளிநாட்டவர்கள் இனி சீக்கிரம் ஜேர்மன் குடியுரிமை பெறலாம்: விதிகளில் மாற்றங்கள் செய்யும் அரசு
வெளிநாட்டவர்கள் இனி 3 முதல் 5 ஆண்டுகளில் ஜேர்மன் குடியுரிமை பெறலாம்.
ஜேர்மன் பாஸ்போர்ட் மற்றும் இரட்டைக் குடியுரிமை வழங்குவதாகக் கூறி திறமை மிக்க வெளிநாட்டவர்களை ஈர்க்க முயன்று வருகிறது ஜேர்மனி.
நாட்டில் நிலவும் பணியாளர்கள் தட்டுப்பாட்டை சரி செய்வதற்காக, ஜேர்மனி தனது புலம்பெயர்தல் அமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. அத்துடன், ஜேர்மானியர்களுடன் ஒன்றிணைந்து வாழும் வெளிநாட்டவர்களுக்கு மூன்றே ஆண்டுகளில் குடியுரிமை வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.
பல நிறுவனங்களுக்கு தற்போது திறன்மிக்க பணியாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமான ஒன்றாகிவிட்டது என்று கூறியுள்ள தொழிலாளர் துறை அமைச்சரான Hubertus Heil, நமது பொருளாதாரத்தின் டிஜிட்டல் மயமாக்கத்தை நிர்வகிக்கவும், நம் நாட்டை பசுமை இல்ல வாயுக்கள் குறைந்த நாடாக ஆக்குவதை நோக்கி நகர்த்திச் செல்லவும், நம் நாட்டுக்கு திறன்மிகு பணியாளர்கள் தேவை என்றார்.
2026 வாக்கில் ஜேர்மனியில் சுமார் 240,000 பணியாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என கணித்துள்ள அவர், பொருளாதாரத்தை டிஜிட்டல் மயமாக்கல், கோவிட் காலகட்டம் மற்றும் உக்ரைன் போர் முதலான காரணிகள் தொழிலாளர் சந்தைக்கு புதிய சவால்களாக உள்ளன என்கிறார்.
எப்படி ஜேர்மனி திறன்மிகு பணியாளர்களை ஈர்க்கத் திட்டமிட்டு வருகிறது?
பணியாளர் தட்டுப்பாடு பிரச்சினையை எதிர்கொள்வதற்காக ஜேர்மனியை புலம்பெயர்ந்தோரை ஈர்க்கும் நாடாக மாற்ற முழுமூச்சுடன் இயங்கத் திட்டமிட்டுள்ளது அந்நாடு.
அது எப்படி என்றால், புலம்பெயர்தலை எளிதாகவும், வேகமாகவும் ஆக்கும் வகையில் புலம்பெயர்தல் கொள்கைகளில் புதிதாக மாற்றங்கள் செய்வதன் ஒரு பகுதியாக, ஜேர்மன் பாஸ்போர்ட்டும், இரட்டைக் குடியுரிமையும் வழங்குவதாக கூறி வெளிநாட்டவர்களை ஈர்க்கத் திட்டமிட்டுள்ளது ஜேர்மனி.
ஜேர்மனி, ஒரு புலம்பெயர்தல் நாடாகவும், சர்வதேச போட்டியில் திறன்மிகு பணியாளர்களை கவர்ந்திழுக்கும் நாடாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் புதிய திறன்மிகு பணியாளர்கள் யுக்தியில் ஜேர்மன் அரசின் முக்கிய குறிக்கோள் என்கிறது அறிக்கை ஒன்று.
அத்துடன், திறன்மிகு பணியாளர்கள் ஐந்து ஆண்டுகளில் ஜேர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் வகையில் தற்போதைய குடியுரிமைச் சட்டங்களையும் மாற்ற தற்போதைய அரசு விரும்புகிறது. அவர்கள் ஜேர்மனியுடன் இணைந்து வாழும் சிறப்பு நிபந்தனைகளை பூர்த்திசெய்யும் பட்சத்தில், மூன்று ஆண்டுகளிலேயே குடியுரிமை பெறுவதும் சாத்தியப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.