பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்கும்... ஜனாதிபதி மேக்ரான் கருத்துக்கு இஸ்ரேல் பதிலடி
ஜூன் மாதத்தில் பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அங்கீகரிக்க இருப்பதாக ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ள கருத்து இஸ்ரேலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா உட்பட 150 நாடுகள்
பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதால், மத்திய கிழக்கில் உள்ள சில நாடுகள் இஸ்ரேல் அரசை அங்கீகரிக்க முடியும் என்றும் ஜனாதிபதி மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாரையும் திருப்திப்படுத்த இதைச் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள மேக்ரான், ஒரு கட்டத்தில் அது சரியாக இருக்கும் என தாம் கருதுவதால் இதை செய்வதாக தெரிவித்துள்ளார்.
இந்தியா உட்பட சுமார் 150 நாடுகள் பலஸ்தீனத்தை அங்கீகரித்துள்ளன. அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் ஜப்பான் உள்ளிட்ட முதன்மையான மேற்கத்திய நாடுகள் இதுவரை பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை.
அதேவேளை, சவுதி அரேபியா, ஈரான், ஈராக், சிரியா மற்றும் ஏமன் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலையும் ஒரு நாடாக அங்கீகரிக்கவில்லை. இந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரானின் இந்த முடிவுக்கு இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கிடியோன் சார் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அது பயங்கரவாதத்திற்கான வெகுமதியாக இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய சக்தியாக
மேலும், கற்பனையான ஒரு பாலஸ்தீன நாட்டை எந்த ஒரு நாடும் ஒருதலைப்பட்சமாக அங்கீகரிப்பது, நாம் அனைவரும் அறிந்த யதார்த்தத்தில், பயங்கரவாதத்திற்கான பரிசாகவும், ஹமாஸ் படைகளுக்கு ஒரு ஊக்கமாகவும் இருக்கும் என அமைச்சர் கிடியோன் சார் தெரிவித்துள்ளார்.
இந்த மாதிரியான நடவடிக்கைகள் நமது பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை ஒருபோதும் கொண்டு வராது என குறிப்பிட்டுள்ள அவர், நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.
2024 மே மாதம் அயர்லாந்து, நோர்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தன, அதைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் ஸ்லோவேனியா அறிவித்தது.
ஆனால் தற்போது பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் மிக முக்கியமான ஐரோப்பிய சக்தியாக பிரான்ஸ் இருக்கும். ஜூன் மாதம் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. மாநாட்டில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |