சந்தேகத்துக்குரிய ரஷ்ய கப்பல் தொடர்பில் பிரான்ஸ் எடுத்துள்ள முடிவு
டென்மார்க் நாட்டுக்குள் ட்ரோன்களை பறக்கவிட்ட ரஷ்ய கப்பல் என சந்தேகிக்கப்படும் கப்பல் ஒன்றை பிரான்ஸ் பிடித்துவைத்திருந்தது.
இந்நிலையில், அந்தக் கப்பல் தன் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய கப்பலை பிடித்து நிறுத்திய பிரான்
பிரான்சிலுள்ள Saint-Nazaire என்னுமிடத்தின் அருகிலுள்ள கடற்கரையில் புஷ்பா என பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்ட கப்பல் ஒன்று பயணித்த நிலையில், அதை பிரான்ஸ் கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
சமீபத்தில் டென்மார்க் எல்லைக்குள் நுழைந்த மர்ம ட்ரோன்களுக்கும் இந்த கப்பலுக்கும் தொடர்பிருக்கலாம். அதாவது, அந்த ட்ரோன்கள் இந்த கப்பலிலிருந்து ஏவப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அந்தக் கப்பலை பிரான்ஸ் பிடித்து நிறுத்தி வைத்தது.
அந்தக் கப்பல் பணியாளர்கள் மிக பயங்கர குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால், அவர்கள் சட்டப்படி தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்திருந்தார்.
கப்பலை விடுவித்த பிரான்ஸ்
இந்நிலையில், பிரான்ஸ் அந்தக் கப்பலை விடுவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று அந்தக் கப்பல் தன் பயணத்தைத் தொடர்வது தெரியவந்துள்ளதாக AFP ஊடகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், அந்தக் கப்பலின் மாலுமியான சீனர் ஒருவரை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்திருந்த நிலையில், அவரும் விடுவிக்கப்பட்டு அந்தக் கப்பலில் பயணிப்பதாகவும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பலை பிரான்ஸ் அதிகாரிகள் பிடித்து வைத்திருந்ததைக் குறித்து ரஷ்ய நிபுணர்கள் முன் பேசிய ரஷ்ய ஜனாதிபதியான புடின், அந்தக் கப்பல் எந்த நாட்டின் கடல் எல்லையிலும் இல்லை, நடுநிலையான கடல்பகுதியில் எந்த நியாயமும் இல்லாமல் கைப்பற்றப்பட்டுள்ளது, அதில் ராணுவ தளவாடங்களும் இல்லை என்று கூறியிருந்தார்.
மேலும், அந்தக் கப்பல் பிரான்சால் பிடித்துவைக்கப்பட்டுள்ள விடயம் கடற்கொள்ளைக்கு சமம் என்று கூறிய புடின், கடற்கொள்ளையர்களை அழிக்கவேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |