பிரான்சில் நடந்த மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது! பொலிசார் பலர் காயம்: கைது செய்த பொலிஸ்
பிரான்சில் பல்வேறு இடங்களில் மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால், இதில் ஏராளமான பொலிசார் படுகாயமடைந்தனர்.
பிரான்சில் கொரோனாவின் நான்காவது அலையின் தாக்கம் உள்ளது. குறிப்பாக பீட்டா மற்றும் டெல்டா வகை வைரஸ்களின் பரவல் தீவிரமாக உள்ளதால், அதைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்படி போடப்பட்ட ஒரு கட்டுப்பாடு தான் சுகாதார சான்றிதழ், அதாவது தொடருந்துகளில் செல்லும் போது, மக்கள் அதிகம் கூடும் இடங்களிலே இது கட்டாயம் தேவை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில், சுமார் 161000பேர் கலந்துகொண்டனர். தலைநகர் பரிசில் 11,000 பேர் கலந்துகொண்டதாகவும், இதில் சில நகரங்களில் வன்முறை சம்பவங்களும் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வன்முறையில் மொத்தமாக 27 பொலிசார், இரு ஜொந்தாமினரும் என மொத்தம் 29 அதிகாரிகள் காயமடைந்தனர்.
ஆர்ப்பாட்ட நாள் முடிவில் 24 பேர் பரிசில் கைது செய்யப்பட்டிருந்தனர். நாடு முழுவதும் 71 பேர் கைதாகியுள்ளனர்.
பரிசில் கைதாகியிருந்த 24 பேரில் 21 பேர் காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.