புலம்பெயர்வோர் படகுகளை திருப்பி அனுப்பும் பிரித்தானியாவின் திட்டம்: பிரான்ஸ் நிராகரிப்பு
ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் பயணிக்கும் படகுகளை திருப்பி அனுப்பும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது.
பிரான்சிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் படகுகள் மூலம் புலம்பெயர்வோர் நுழைவது தொடர்ந்தவண்ணம் உள்ளதால், பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திற்கு கடும் தலைவலி உருவாகி உள்ளது. இந்நிலையில், இந்த பிரச்சினையை சமாளிக்க பிரித்தானியா ஒரு திட்டத்தை முன்வைத்தது.
அதன்படி, ஆங்கிலக் கால்வாய்க்குள் நுழையும் புலம்பெயர்வோர் படகுகளை தடுத்து, அவற்றை மீண்டும் பிரித்தானிய கடல் எல்லைக்கு வெளியே கொண்டுவிடுவது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இந்த திட்டத்தை ஏற்றுக்கொள்ள பிரான்ஸ் மறுத்துவிட்டது.
ஆக, புலம்பெயர்வோர் பிரச்சினையை சமாளிக்க சரியான திட்டம் எதுவும் இல்லாததால், இந்த ஆண்டு மீதமுள்ள மாதங்களிலும் பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோர் எண்ணிக்கை அதிகரித்தவன்ணமே இருக்கும் என்பதை சில பிரித்தானிய அதிகாரிகளே ஒப்புக்கொள்கிறார்கள்.
சென்ற வாரம், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரை கண்காணிப்பதற்காக பொலிசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பதற்காகவும் பிரான்சுக்கு 54 மில்லியன் பவுண்டுகள் வழங்கும் சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் ஒன்றை பிரான்சுடன் செய்துகொண்டார் பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல்.
ஆனால், பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று ட்ரோன்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்துவிட்டதால், பிரீத்தியின் திட்டத்தில் மண் விழுந்துவிட்டது.
இப்போது படகுகளை திருப்பி அனுப்பும் திட்டத்தையும் பிரான்ஸ் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டதால், பிரித்தானியாவைப் பொருத்தவரை, புலம்பெயர்வோர் பிரச்சினை இப்போதைக்கு தீராத தலைவலியாகவே தொடரும் என தோன்றுகிறது.