பிரான்சில் இரயிலில் பயணிப்பவர்களுக்கு இனி இது கட்டாயம்! மீறினால் தடை என அறிவிப்பு
பிரான்சில் இரயில்களில் கொரோனாவிற்கான சுகாதார அனுமதிச் சான்றிதழ் கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைபிடிக்க உள்ளதாக, எஸ்.என்.சி.எப் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் நான்காவது அலையில் இருக்கும் பிரான்ஸ், மக்களை காப்பாற்றுவதற்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை தொடர்ந்து தெரிவித்து வருகிறது.
குறிப்பாக டெல்டா மற்றும் பீட்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் பிரான்சில் தீவிரமான பரவலை கொண்டுள்ளது. இதனால், இதை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், அதில் பிரான்சில் கொரோனா சுகாதார அனுமதிச் சான்றிதழ் கட்டுப்பாடுகளைத் திவிரமாகக் கடைப்பிடிக்க உள்ளதாக அந்நாட்டு இரயில்வே நிர்வாகம் SNCF தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஆகஸ்ட் மாதத்தின் ஆர்ம்பத்தில் இருந்து, இரயில் மூலம் வெகுதூரம் பயணிப்பவர்களுக்கு passe sanitaire, அதாவது சுகாதார அனுமதிச் சான்றிதழ் கட்டுப்பாட்டுப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் தாங்கள் பயணிக்கும் நேரங்களில், இதை கண்காணிப்பதற்காக சிறப்பு கண்காணிப்பாளர்களை நியமிக்கவுள்ளதாகவும், இந்த கட்டுப்பாடு மற்றும், கட்டாயச் சுகாதார அனுமதிச் சான்றிதழ் பற்றிய விபரங்கள். பயணச்சீட்டின் பதிவின் போது சொல்லப்படுவதுடன், அவர்களிற்கான தகவல் எஸ்.எம்.எஸ் மூலம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் மீறி, அப்படி குறித்த சுகாதார சான்றிதழ் இன்றி பயணிகள் ஏறினால், அவர்கள் இரயிலில் செல்வதற்கு தடை செய்யப்படுவார்கள் என்று SNCF எச்சரித்துள்ளது.