வாழ்வையே மாற்றிவிட்ட மொபைல் போன்: பிரான்ஸ் எடுத்துவரும் நடவடிக்கை
மொபைல் போன்கள், வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டன. குறிப்பாக, சிறுபிள்ளைகள் பெரும்பாலும் மொபைல் போன்களிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.
அதை மாற்ற பிரான்ஸ் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
வாழ்வையே மாற்றிவிட்ட மொபைல் போன்
இன்று, மொபைல் போன் கையில் இல்லாத ஆட்களே இல்லை எனலாம். மொபைல் போன்களால் நன்மை உள்ளதை மறுப்பதற்கில்லை என்றாலும், அவை பிள்ளைகள் வாழ்வை முற்றிலும் மாற்றிவிட்டதையும் மறுக்கமுடியாது.
நடுத்தர வயதிலிருக்கும் நம்மில் பலர் வழ்வின் பாதியில்தான் மொபைல் போனை கண்ணால் பார்க்கவே செய்தோம்.

ஆனால், பிள்ளைகள் அப்படியில்லை, கவச குண்டலத்துடன் பிறந்த கர்ணனைப்போல, பிறந்து சில ஆண்டுகளிலேயே பல பிள்ளைகளின் உடலின் ஒரு பாகம் போலவே மாறிவிட்டன மொபைல் போன்கள்.
பல வீடுகளில், பிள்ளைகள் தொந்தரவு செய்யக்கூடாது என்பதற்காக கையில் மொபைலைக் கொடுத்து, விளையாடு என்று பெற்றோரே கூறுவது சகஜமாகிவிட்டது.
ஆக, பிள்ளைகள் வெகு நேரம் மொபைலுடன் அல்லது கணினி முன் செலவிடுகிறார்கள். உடலை அசைத்து விளையாடும் விளையாட்டுகள் குறைந்துகொண்டே வருகின்றன.
விளைவு, இரவு வெகு நேரம் கண்கள் மொபைலை அல்லது கணினியைப் பார்த்துக்கொண்டிருப்பதா தூக்கம் வர மறுக்கிறது.
லேட்டாகத் தூங்கி காலையில் எழவேண்டியுள்ளதால் பிள்ளைகளின் உற்சாகம் குறைகிறது. படிப்பில் கவனம் செலுத்துவதில் பிரச்சினை ஏற்படுகிறது.
உடலை அசைத்து விளையாடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. சிறுவயதிலேயே கண்ணாடி அணிவதும், நீரிழிவு பிரச்சினை ஏற்படுவதும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
ஆக, பிள்ளைகளை இந்த மொபைல் மற்றும் கணினியிடமிருந்து காப்பாற்றும் நோக்கில், பிரான்ஸ் முழுவதும், Ten Days Without Screens என்னும் விடயம் முயற்சி செய்துபார்க்கப்பட உள்ளது.
அதாவது, பத்து நாட்களுக்குப் பிள்ளைகள் மொபைல் அல்லது கணினியைத் தொடாமல் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
அதற்கு பதிலாக, வெளியே சென்று விளையாடுதல், குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், பெற்றோருடன் இணைந்து சமையல் செய்தல் என பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட பிள்ளைகள் அறிவுறுத்தப்படுவதுடன், பெற்றோருக்கும் அது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
எத்தனை பேர் இந்த விடயத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளப்போகிறார்கள், விளைவுகள் எப்படி இருக்கப்போகிறது என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |