புலம்பெயர்வோரை தடுக்கும் பிரித்தானியர்கள் கைது செய்யப்படுவார்கள்: பிரான்ஸ் எச்சரிக்கை
பிரித்தானிய வலதுசாரி அமைப்பு ஒன்றைச் சேர்ந்தவர்கள் சிலர், பிரான்சுக்கு வந்து, ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயலும் புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்த முயன்றதைக் குறித்த செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
படகுகளை அடித்து நொறுக்கிய பிரித்தானியர்கள்
பிரான்சிலிருந்து சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசுக்கு 480 மில்லியன் பவுண்டுகள் கொடுத்துள்ளது.

பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரானும், சட்டவிரோத புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
ஆனால், கடலுக்குள் இறங்கி புலம்பெயர்வோரைத் தடுப்பது முதலான அந்தக் கடுமையான நடவடிக்கைகளால், புலம்பெயர்வோர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என பயந்து அவற்றைப் பின்பற்ற பிரான்ஸ் பொலிசார் தயக்கம் காட்டுகிறார்கள்.

இந்நிலையில், சமீபத்தில், பிரித்தானியாவை மையமாகக் கொண்ட, Raise the Colours என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உட்பட பிரித்தானியர்கள் சிலர், பிரான்சிலிருந்து பிரித்தானியாவுக்கு சட்டவிரோதமாக புலம்பெயர்வோரைத் தடுப்பதற்காக தாங்களே அதிரடி நடவடிக்கைகளில் இறங்கினார்கள்.
அவர்கள் பிரான்சுக்கே சென்று, பிரான்ஸ் கடற்கரைகளில் மணல் குவியல்களுக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ள சிறு படகுகளின் எஞ்சின்களை அடித்து நொறுக்கி, அதை வீடியோவும் எடுத்து வெளியிட்டிருந்தார்கள்.
ஏற்கனவே, Gravelines என்னுமிடத்தில், கடலுக்குள் இறங்கி சிறுபடகொன்றில் ஏற முயன்ற புலம்பெயர்வோர் சிலரை அவர்கள் துரத்தும் காட்சிகளும் வெளியாகின.
பிரான்ஸ் எச்சரிக்கை
ஆனால், அப்படி பிரான்சுக்கு வந்து புலம்பெயர்வோரை தடுக்கும் பிரித்தானியர்கள் கைது செய்யப்படுவார்கள் என பிரான்ஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் உள்துறை அமைச்சரான Laurent Nunezக்கு நெருக்கமானவர்கள், அப்படி பிரான்சுக்கு வந்து புலம்பெயர்வோரை தடுக்கும் பிரித்தானியர்கள் கைது செய்யப்படவேண்டும் என அமைச்சர் விரும்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |