இனி இலவச கொரோனா பரிசோதனை அனைவருக்கும் கிடையாது: அறிவித்துள்ள நாடு
பல ஐரோப்பிய நாடுகள் இலவச கொரோனா பரிசோதனையை முடிவுக்கு கொண்டு வந்தவண்ணம் உள்ளன.
அவ்வகையில், ஜேர்மனியும் இனி இலவச கொரோனா பரிசோதனை அனைவருக்கும் கிடையாது என அறிவித்துள்ளது. மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள முன்வரவேண்டும் என்ற நோக்கில் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.
ஆகவே, ஜேர்மனியில் வாழ்வோர் இனி கொரோனா ஆன்டிஜன் பரிசோதனை செய்துகொள்ள கட்டணம் செலுத்தவேண்டும்.
பல ஐரோப்பிய நாடுகளைப்போல, மக்கள் உணவகங்கள் முதலான இடங்களுக்குச் செல்லவேண்டுமானால் கொரோனா பரிசோதனை செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆதாரத்தைக் காட்டவேண்டும் என்ற விதி ஜேர்மனியிலும் உள்ளது. சிலர் தடுப்பூசி பெறுவதற்கு பதிலாக, இலவச பரிசோதனைகள் செய்து தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழுடன் சுற்றிவருகிறார்கள். தற்போது இலவச பரிசோதனை முடிவுக்கு வருவதால், அவர்கள் கொரோனா சான்றிதழ் பெற தாங்களே செலவு செய்து பரிசோதனை செய்யவேண்டியிருக்கும்.
இருந்தாலும், 12 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள், மருத்துவக் காரணங்களுக்காக தடுப்பூசி பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் ஆகியோருக்கும் இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு இலவச கொரோனா பரிசோதனை தொடரும்...
மேலும், 12 முதல் 17 வயதுள்ளவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கும், டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இலவச கொரோனா பரிசோதனை உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மருத்துவர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையால் PCR கொரோனா பரிசோதனை பரிந்துரைக்கப்படுபவர்களுக்கும் இலவச பரிசோதனை தொடரும். ஆகவே, கொரோனா அறிகுறி உடையவர்கள் தொடர்ந்து இலவசமாக PCR கொரோனா பரிசோதனை செய்துகொள்ளலாம்.