உயிர் உறையும் குளிர்... நொறுங்கிய காருக்குள் 5 நாட்கள் தனியாக போராடிய பெண்மணி
அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கிய பெண்மணி ஒருவர் நொறுங்கிய காருக்குள் கடும் குளிரில் 5 நாட்கள் உயிருக்கு போராடிய சம்பவம் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற செவிலியரான 68 வயது Lynnell McFarland என்பவர் சம்பவத்தன்று, தமது உறவினரின் நினைவு நாள் நிகழ்வில் பங்கேற்ற பின்னர் நவம்பர் 18ம் திகதி தனது குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
இந்த நிலையில் பனிப்பொழிவில் சிக்கிய அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. பிரதான சாலை 97கும் 100 அடி தொலைவிலேயே குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
இதில் அவரது கை மற்றும் முழங்காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. சம்பவத்திற்கு பின்னர் அவரிடம் மொபைல் இருந்தும் உதவிக்கு அதை பயன்படுத்த முடியாத சூழலில் அவர் அப்போது சிக்கிகொண்டுள்ளார்.
இந்த நிலையில் தமது தாயார் தொடர்பில் தகவல் ஏதும் இல்லை என அடுத்த நாள் பொலிசாரை நாடியுள்ளார் அவரது மகள். மட்டுமின்றி, தமது தாயாரை தேடும் பணியில் அவரும் களமிறங்கியிருக்கிறார்.
செவிலியர் McFarland விபத்தில் சிக்கிய பகுதியில், அதே நாளில் சில பொலிசார் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். ஆனால் மரங்கள் அடர்ந்த பகுதியில் செவிலியரின் கார் சிக்கியிருந்தது காரணமாக பொலிசாரின் பார்வையில் சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், மழை நீர் மட்டுமே அருந்தி கடும் குளிரில் 5 நாட்கள் அவர் உயிருக்கு போராடியுள்ளார். விபத்தில் சிக்கியுள்ள குறித்த செவிலியரின் கார் ஐந்தாவது நாள் சில அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டது.
தொடர்ந்து துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள் தரப்பு அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மூன்று அறுவை சிகிச்சை மற்றும் சில வார சிகிச்சைக்கு பின்னர் உயிர் பிழைத்த செவிலியர் கிறிஸ்துமஸ் நாளில் குடியிருப்புக்கு திரும்பியுள்ளார்.
தமக்கு நேர்ந்த விபத்து மற்றும் ஐந்து நாள் அனுபவத்தை அவரே சமூக ஊடகம் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.