தடுப்பூசி விவகாரம்... பிரான்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தடுப்பூசி கட்டாயம் அல்லது வேலை இழக்க நேரிடும் என அறிவுறுத்திய மருத்துவமனைக்கு எதிராக ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
பிரான்சில் Montelimar பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்று, எதிர்வரும் செப்டம்பர் பாதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊழியர்களை கட்டாயப்படுத்தியுள்ளதுடன், தவறும் ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது தங்கள் உரிமைக்கு எதிரானது என கொந்தளித்த ஊழியர்கள், கட்டாய தடுப்பூசிக்கு எதிராக தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்த போராட்டத்தால் 200 மருத்துவர்களும் 1,500 செவிலியர்களும் பணிக்கு செல்லாமல் புறக்கணித்துள்ளனர். தொடர்புடைய மருத்துவமனை முன்பு குவித்த நூற்றுக்கணக்கானவர்கள், ஊரடங்கு விதிகளுக்கு எதிராகவும், கட்டாய தடுப்பூசிக்கு எதிராகவும் முழக்கமிட்டுள்ளனர்.
பிரான்சில் சுகாதார ஊழியர்கள் செப்டம்பர் 15ம் திகதிக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற திட்டத்தை பிரெஞ்சு சட்டமன்றம் இறுதி செய்ய இருக்கிறது.
இதனால் தடுப்பூசி போட மறுக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார ஊழியர்கள் தங்கள் ஊதியத்தை அல்லது வேலையை இழக்க நேரிடும்.
ஆனால் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக ஜூலை மத்தியில் இருந்தே பிரான்ஸ் முழுமையும் போராட்டக் களமாக மாறியுள்ளது.