பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி மூன்றே வாரங்களில் சிறையிலிருந்து விடுதலை
ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸி, மூன்றே வாரங்களில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்!

சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் சார்க்கோஸி
2007ஆம் ஆண்டு, சார்க்கோஸி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது, தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக லிபியா நாட்டின் சர்வாதிகாரியான முஅம்மர் அல் கடாஃபி, சார்க்கோஸிக்கு பல மில்லியன் யூரோக்கள் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு நடந்துவந்தது.

சார்க்கோஸி வழக்கில், அவர் மீதான, சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு மட்டும் உண்மை என முடிவு செய்த நீதிமன்றம் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் 21ஆம் திகதி அவர் சிறையிலடைக்கப்பட்டார்.
சார்க்கோஸி சிறையிலடைக்கப்பட்டதுமே, அவரது சட்டத்தரணிகள் அவரை சீக்கிரமாக விடுதலை செய்யக்கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளனர்.
அத்துடன், சார்க்கோஸிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அவரது சட்டத்தரணிகள் மேல்முறையீடும் செய்துள்ளனர்.
இந்நிலையில், சார்க்கோஸியை சீக்கிரமாக விடுதலை செய்யக்கோரி விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தை பரிசீலித்த நீதிமன்றம் அவரை சிறையிலிருந்து விடுவித்துள்ளது.

அவரது மேல்முறையீட்டு வழக்கு அடுத்த ஆண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், சார்க்கோஸி, அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருப்பார். அத்துடன், அவர் பிரான்சை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், தனது சமூக ஊடகப் பக்கத்தில், ‘இனி என்னை நிரபராதி என நிரூபிப்பதில் மட்டுமே எனது முழு கவனமும் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார் சார்க்கோஸி.
மேலும், ’வாய்மையே வெல்லும், கதையின் முடிவு இனிதான் எழுதப்பட உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார் அவர்.

சார்க்கோஸி, அக்டோபர் மாதம் 21ஆம் திகதி சிறையிலடைக்கப்படுவதற்காக புறப்பட்டது போலவே, இப்போது அவர் சிறையிலிருந்து புறப்படும் காட்சிகளும், தன் வீட்டை வந்தடையும் காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |