கொலை செய்யப்பட்ட பிரெஞ்சு பள்ளி மாணவி... ஜனாதிபதி மேக்ரான் சொன்ன விடயம்
பிரான்ஸ் முழுவதும் பரவலாகக் கொந்தளிப்பை ஏற்படுத்திய 11 வயது பள்ளி மாணவியின் கொலைக்காக, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அமைதிப் பேரணியில் ஈடுபட்டனர்.
கண்காணிப்பில் இருந்தவர்
கொலை செய்துள்ளதாக சந்தேகிக்கப்படும் நபரிடம் முந்தைய சிறார் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த காவல்துறை தவறிவிட்டது என்பதே மக்களின் கொந்தளிப்புக்கு காரணம்.

இந்த நிலையில், இனி ஒருபோதும் இல்லை என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, அந்தச் சிறுமியின் பெற்றோர் ஞாயிற்றுக்கிழமையன்று தென்மேற்குப் பகுதியிலுள்ள ஃப்ளூரன்ஸ் கிராமத்தில் இறுதி ஊர்வலத்தை வழிநடத்திச் சென்றனர்.
குழந்தைகள் உட்பட பேரணியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் வெள்ளைச் சட்டை அல்லது டி-ஷர்ட்களை அணிந்திருந்தனர்; அவற்றில் பலவற்றில், மரணமடைந்த அந்த இளம் சிறுமியின் புன்னகைக்கும் முகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் பொதுமக்களிடையே துயரத்துடன் ஆழ்ந்த அதிர்ச்சியும் கோபமும் கலந்திருக்கின்றன. சிறுமியின் மாயம் மற்றும் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர் 2017-ஆம் ஆண்டிலிருந்தே காவல்துறையின் கண்காணிப்பில் இருந்தவர் என்பது தெரியவந்ததையடுத்து,
இந்தக் கொலை சம்பவம் பிரான்சின் நீதித்துறையில் நிலவும் தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் குறித்த தீவிரமான தேசிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.
இந்த நிலையில், சட்ட அமைப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தோல்வி ஏற்பட்டிருந்ததை பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் ஒப்புக்கொண்டார்.
குறைபாடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்ற உண்மையை நாம் புறக்கணிக்க முடியாது என்று கடந்த வாரம் மாண்டினீக்ரோ விஜயத்தின்போது அவர் கூறியிருந்தார்.
இரண்டு பிள்ளைகளின் தந்தையும் பள்ளித் தூய்மைப் பணியாளருமான ஜெரோம் பரேலாவுக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட ஒரு சாம்பல் நிறக் காரில், தொடர்புடைய சிறுமி மே 29 அன்று ஜெர்ஸ் மாகாணத்தின் ஃப்ளூரன்ஸ் நகரில் ஏறுவது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
சிறுமி காணாமல் போன இடத்திலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள, பயன்பாட்டில் இல்லாத தானியக் கிடங்கு ஒன்றில் ஏழு நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.
10 வயது சிறுமி
இந்த நிலையில் சிறுமியைக் கொன்றதை மறுத்த பரேலா, அவரை உள்ளூர் நீச்சல் குளத்தில் இறக்கிவிட்டதாகக் காவல்துறையிடம் கூறியுள்ளார். அவர் கைது செய்யப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 10 வயது சிறுமியின் தாய், அவர் தனது மகளைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணை மற்றும் குழந்தைக்கு பாலியல் துஷ்பிரயோகத்துடன் தொடர்புடைய காயங்கள் இருந்ததை உறுதிப்படுத்தும் உளவியல் மற்றும் மருத்துவ அறிக்கைகளை உள்ளடக்கிய முதற்கட்ட ஆய்வறிக்கையானது ஜனவரி மாதம், அருகிலுள்ள துலூஸ் நகர காவல்துறையினரால், அவரிடம் விசாரணை நடத்துவதற்கான அறிவுறுத்தலுடன், ஆச் நகரில் உள்ள அரசு சட்டத்தரணிகள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இருப்பினும், அரசு சட்டத்தரணிகள் அலுவலகம் பல வாரங்களாக அந்தக் கோப்பைத் திறக்கத் தவறியதாகவும், பின்னர் அந்த வழக்கிற்கு அதிகாரிகளை நியமிக்க மேலும் ஆறு வாரங்கள் எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
பள்ளி மாணவி கடத்தப்பட்டு கொல்லப்படுவதற்கு முந்தைய மூன்று மாதங்களில், பரேலா இன்னும் தொடர்பு கொள்ளப்படவோ அல்லது விசாரணைக்காக அழைக்கப்படவோ இல்லை.
இந்த நிலையில், பிரான்சின் நீதித்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவிக்கையில், தற்போது 3 மில்லியன் காவல்துறை புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், அவற்றில் 70,000 புகார்கள் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்பானவை என்றும் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |