பிரித்தானிய மகாராணியார் இறந்துவிட்டால் என்ன நடக்கும்? இரகசியத்தை கசியவிட்ட நபரை வலைவீசி தேடும் அரண்மனை
பிரித்தானிய மகாராணியார் இறந்து விட்டால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற திட்டம் கசிந்ததால் அரண்மனை வட்டாரம் கடும் கோபமடைந்துள்ள நிலையில், அந்த செய்தியை கசியவிட்ட நபரை வலை வீசித் தேடி வருகிறார்கள் அரண்மனை அலுவலர்கள்.
பிரித்தானிய மகாராணியார் இறந்தால் அடுத்து என்னென்ன நடக்கும் என்பது குறித்த செய்தி ஒன்று நேற்று வெளியானது.
அதன்படி, 'Operation London Bridge' என்று அழைக்கப்படும் அந்த திட்டம், மகாராணியார் இறக்கும் நாள் 'D-Day' என அழைக்கப்படும் என்றும், மகாராணியார் இறந்ததும், அது குறித்த தகவல் உடனடியாக பிரித்தானிய பிரதமருக்கு தொலைபேசி மூலம் தெரிவிக்கப்படும். ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மகாராணியாரின் இறப்பு தெரிவிக்கப்படும். அவர் இறந்து 10 நிமிடங்களுக்குள் அனைத்து கொடிகளும் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மகாராணியாரின் இணையதளம் கருப்பாக மாறும்.
அதைத் தொடர்ந்து, பிரதமர் தன் இல்லம் முன்பு மகாராணியாரின் மரணம் குறித்து உரையாற்றுவார். மாலை 6 மணி செய்தியில் மன்னர் சார்லஸ் உரையாற்றுவார்.
இறுதியாக மக்கள் அஞ்சலிக்குப் பிறகு மகாராணியாரின் உடல் அடக்கம் செய்யப்படும் என்பது வரையிலான முழு விவரங்களும் அந்த செய்தியில் இடம்பெற்றிருந்தன.
ஆனால், இது ஒரு ராஜ இரகசியம் ஆகும். இப்படிப்பட்ட ஒரு பெரிய இரகசியம் கசிந்ததால் அரண்மனை வட்டாரம் கடும் கோபத்தில் இருப்பதாக இன்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படிப்பட உச்ச கட்ட இரகசியத்தைக் கசிய விட்ட கருப்பு ஆடு யார், எதற்காக அதைச் செய்தார் என்பதைக் கண்டுபிடிக்க, அரண்மனை அலுவர்களும் நாடாளுமன்ற அலுவலர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.