டோனிக்காக 10 நாட்கள் வாக்குவாதம்... அடம்பிடித்த கங்குலி: மனம் திறந்த முன்னாள் வீரர்
எம்.எஸ்.டோனி இந்திய அணியில் சேர்ந்த விதம், அதற்காக நடந்த வாக்குவாதங்கள் தொடர்பில் வெளிவராத தகவல்களை முன்னாள் வீரர் கிரண் மோரே பகிர்ந்துள்ளார்.
டோனியிடம் இருக்கும் விக்கெட் கீப்பிங் திறமையை முதன்முதலில் அடையாளம் கண்டவர் முன்னாள் வீரர் கிரண் மோரே. டோனி இந்திய அணியில் இடம் பிடித்தது தொடர்பில் இதுவரை வெளிவராத தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார் கிரண் மோரே.
இந்திய அணியில் ராகுல் டிராவிட்-க்கு மாற்றாக ஒரு விக்கெட் கீப்பரை தேடி வந்தோம். கிரிக்கெட் முறைகள் மாறிக்கொண்டிருந்த நேரம் அது. எனவே துடுப்பாட்ட வரிசையில் 6 -7வது இடத்தில் களமிறங்கி அதிரடி காட்டுப்பவராய் இருக்க வேண்டும் என எண்ணினோம்.
அப்போது தான் டோனியை விக்கெட் கீப்பர் மற்றும் துடுப்பாட்ட வீரராக ஒரு உள்ளூர் போட்டியில் பார்த்தேன். அணியின் ஸ்கோர் 170 ஆக இருந்த நிலையில் டோனி மட்டுமே அதில் 130 ஓட்டங்களை விளாசி இருந்தார்.
இந்திய அணி அப்போது விளையாடி வந்த அந்த தொடரின் இறுதிப்போட்டியில் டோனிக்கு விக்கெட் கீப்பர் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என கங்குலியிடம் கோரினேன்.
ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளவே இல்லை. ஏனென்றால் தீப் தாஸ்குப்தா ஏற்கனவே விக்கெட் கீப்பிங் பணியை செய்து வந்தார்.
பின்னர் கங்குலியை சமாதானப்படுத்துவதற்கு எங்களுக்கு 10 நாட்கள் எடுத்துக்கொண்டது என கூறியுள்ள கிரண் மோரே, அதன் பிறகு டோனியின் தலைமையில் இந்திய கிரிக்கெட்டில் நடந்தது எல்லாம் வரலாறு என்றார்.