எரிவாயு பிரச்சினைக்கு ஜேர்மன் நகரம் ஒன்று கண்டுபிடித்துள்ள நாற்றம் வீசும் தீர்வு!
எரிவாயு விடயத்தில் ஜேர்மனியை ரஷ்யா கைவிட்டாலும், உணவளித்து வளர்க்கும் கால்நடைகள் கைகொடுத்துள்ளன எனலாம்.
ஆம், கோழிகள், பசுக்கள் மற்றும் பன்றிகளின் கழிவிலிருந்து இயற்கை எரிவாயு தயாரித்து சாதனை படைத்துள்ளது ஜேர்மன் நகரம் ஒன்று.
பெர்லினுக்கு 140 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது Zerbst நகரம். தினந்தோறும் கோழிகள், பசுக்கள் மற்றும் பன்றிகளின் கழிவிலிருந்து போதுமான அளவுக்கு உயிர் எரிவாயு தயாரிக்கும் நிலையம் ஒன்று அங்கு அமைந்துள்ளது.
அந்த நிலையத்தின் உரிமையாளரான Chris Döhring கூறும்போது, நாளொன்றிற்கு தாங்கள் 20,000 லிற்றர் எண்ணெய் நிரப்பப்படும் ஒரு டேங்கர் அளவுக்கு சமமான அளவு எரிவாயு தயாரிப்பதாக தெரிவிக்கிறார்.
Image -euronews
ஜேர்மனியைப் பொருத்தவரை எரிவாயு நாற்றமடிக்கிறதா வாசனை அடிக்கிறதா எனபதெல்லாம் இப்போது பிரச்சினை இல்லை. எங்கிருந்து வந்தாலும் சரி, ஜேர்மனிக்கு இப்போது எரிவாயு அவசரமாகத் தேவைப்படுகிறது. ரஷ்ய எரிவாயு நிறுவனமான Gazprom ஜேர்மனிக்கு வழங்கி வந்த எரிவாயுவின் அளவை 20 சதவிகிதம் அளவுக்கு குறைத்துவிட்ட நிலையில், இந்த குளிர்காலத்தில் ஆற்றல் தட்டுப்பாடு ஏற்படலாம் என நாட்டில் ஏற்கனவே வதந்திகள் உலாவரத் துவங்கியாயிற்று.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், தனது உயிர் எரிவாயு நிலையம், Zerbst நகரம் முழுமைக்கும் தேவையான ஆற்றலை அளிக்க இயலும் என்கிறார் Döhring. அந்த உயிர் எரிவாயுவைக் கொண்டு அந்நகரத்தில் இருக்கும் மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற முக்கியமாக கட்டிடங்களை வெப்பப்படுத்த முடியும் என்கிறார் அவர்.