எரிபொருள் வரி குறைப்பு: அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை
பெட்ரோல் மற்றும் டீசலுக்கான பெடரல் வரியை மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் பெட்ரோல் நிலையங்களில் அமெரிக்க மக்களுக்கு மலிவான எரிபொருள் கிடைக்க வாய்ப்பு உருவாகும் என ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை பிற்பகல் வெள்ளை மாளிகையில் இருந்து பேசிய பைடன், பெட்ரோல் மற்றும் டீசல் வரியை 90 நாட்களுக்கு ரத்து செய்ய ஒப்புதல் அளிக்குமாறு நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.
பரபரப்பான கோடை விடுமுறை மற்றும் மக்கள் அதிகமான பயணம் மேற்கொள்ளும் வேளை இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவில் பெட்ரோலுக்கான பெடரல் வரி ஒரு கேலனுக்கு சுமார் 18 cents மற்றும் டீசலுக்கு 24 cents என அமுலில் இருந்து வருகிறது.
தற்போது இந்த வரியை ரத்து செய்ய கோரிக்கை விடுத்துள்ள ஜனாதிபதி பைடன், லாபம் ஈட்டும் வேளை இதுவல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். மட்டுமின்றி, அமெரிக்க மாகாணங்களும் எரிபொருள் வரியை அடுத்த 90 நாட்களுக்கு ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஒவ்வொரு மாகாணங்களும் சராசரியாக 30 cents அளவுக்கு வரி வசூலிக்கின்றன. எரிபொருள் வரியை ரத்து செய்வதால் மட்டும் தற்போதைய நிலையில் பெரிதாக மாற்றம் வந்துவிடப்போவதில்லை என குறிப்பிட்டுள்ள பைடன், ஆனால் சிறிதேனும் நிம்மதிக்கு அது வழிவகுக்கும் என்றார்.
உலக நாடுகள் தற்போது அனுபவிக்கும் உணவு பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு மொத்த காரணம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கடும்போக்கு நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார் ஜோ பைடன்.