காஸா தொடர்பில் சத்தமின்றி முக்கியமான பேச்சுவார்த்தையை தொடங்கிய பிரித்தானியா
மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள காஸாவை மீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கை தொடர்பில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த டசின் கணக்கான முக்கிய அதிகாரிகள் குழு ஒன்று பிரித்தானியாவில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
மூன்று நாட்கள்
தொடர்புடைய சந்திப்பில் உலகளாவிய முன்னணி நிதி நிறுவனங்களும் கலந்துகொண்டுள்ளன. எகிப்திய செங்கடல் ரிசார்ட்டான ஷர்ம் எல்-ஷேக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகின் முதன்மையான தலைவர்கள் பலர் கலந்துகொண்டு இஸ்ரேல் - ஹமாஸ் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நிலையில்,
பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகம், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முதன்மையான அதிகாரிகளை சத்தமின்றி ஒன்றிணைத்துள்ளது. திங்களன்று தொடங்கி, மூன்று நாட்கள் நீடிக்கும் இந்த மாநாட்டின் நோக்கமானது,
பாலஸ்தீனத்தால் வழிநடத்தப்படும் போருக்குப் பிந்தைய காஸாவிற்கான முக்கியமான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு முயற்சிகளை தொடங்குவதாகும். இஸ்ரேல் தாக்குதலில் தரைமட்டமாகியுள்ள கட்டிடங்களில் இடிபாடுகளை அகற்றுதல், குடியிருப்புகளை கட்டி எழுப்புதல், உள்கட்டமைப்புகளை உருவாக்குதல், கல்வி மற்றும் சுகாதாரப் பராமரிப்புக்கான அணுகலை மீட்டெடுப்பது உள்ளிட்ட முதன்மையான இலக்குகளை விவாதிக்க உள்ளதாக இளைய வெளிவிவகார அமைச்சர் ஹமிஷ் பால்கனர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னெடுக்கப்போகும் பணியின் அளவு, அது எவ்வளவு அவசரமானது, எவ்வளவு சிக்கலானது என்பதையும், எத்தனை ஆண்டுகளாகும், பல பில்லியன் தொகை செலவாகும் என்பதும் அறிந்துள்ளதாக அமைச்சர் பால்கனர் தெரிவித்துள்ளார்.
தனியார் மூலதனம்
இந்த சந்திப்பில் ஜோர்டான், சவுதி அரேபியா, ஜேர்மனி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளின் முதன்மையான அதிகாரிகளுடன் பாலஸ்தீன ஆணையமும் கலந்துகொண்டுள்ளது.
அரபு மறுசீரமைப்புத் திட்டம் என்று அமைச்சர் ஃபால்கனர் குறிப்பிட்டுள்ள இந்த முன்னெடுப்பை ஆதரிக்கும் பொருட்டு உலக வங்கி, மறுசீரமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான ஐரோப்பிய வங்கியின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய நன்கொடையாளர் நிதி மூலம் மட்டுமல்லாமல், தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கு ஆக்கப்பூர்வமாக சிந்திப்பதன் மூலம், தேவையான விரிவான பொருளாதார ஆதரவை எவ்வாறு ஈட்டுவது என்பதை ஆராய்வதே இந்த மூன்று நாள் மாநாட்டின் நோக்கமாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |