மக்களை கைவிடமாட்டோம்... ஜேர்மன் சேன்ஸலர் அறிவிப்பு
உலக நாடுகள் பல எரிபொருள் தட்டுப்பாடு பிரச்சினையால் தவித்துவரும் நிலையில், கஷ்டப்படும் ஜேர்மன் மக்களுக்கு கூடுதல் நிதி உதவிகள் வழங்க திட்டமிட்டு வருவதாக ஜேர்மன் சேன்ஸலர் உறுதி அளித்துள்ளார்.
நேற்று பெர்லினில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ், நாட்டில் நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியை சமாளிக்க அரசு வைத்துள்ள திட்டங்கள் குறித்து அறிவித்தார். அவற்றில், மக்களுக்கு வழங்கப்பட இருக்கும் நிதியுதவிகள் மற்றும் எரிபொருள் ஜாம்பவானான Uniper நிறுவனத்தில் 30 சதவிகித பங்குகளை வாங்குதல் ஆகிய விடயங்கள் அடங்கும்.
எல்லா பொருட்களின் விலையும் உயர இருப்பதாக எச்சரித்துள்ள சேன்ஸலர் ஷோல்ஸ், மக்களுடைய பாரத்தைக் குறைக்கும் வகையில் அரசு புதிய திட்டங்கள் சிலவற்றை தீட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
இப்போதைக்கு, ஆற்றலுக்கான செலவுக்கு கூடுதல் நிதியுதவி செய்தல் மற்றும் நீண்டகால வேலையில்லாதோருக்கான உதவிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பணக்கஷ்டத்திலிருக்கும் வாடகை வீடுகளில் வாழும் மக்களை சட்ட ரீதியாக பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அரசு திட்டமிட்டு வருகிறது. செப்டம்பர் மாத மையப்பகுதியில் கூட இருக்கும் கேபினட் இந்த உதவிகள் குறித்து விவாதிக்க உள்ளது.
மக்களுக்கு உதவ பல திட்டங்கள் கைவசம் இருப்பதாக தெரிவித்துள்ள ஷோல்ஸ், மக்களை கைவிடமாட்டோம் என்று கூறியுள்ளார்.
Photo: picture alliance/dpa | Britta Pedersen