காபூலில் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஜேர்மனியருக்கு நேர்ந்த கதி! பீதியில் வெளிநாட்டவர்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜேர்மனியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த நாள் முதல், அந்நாட்டில் உள்ள தங்கள் குடிமக்களை வெளிநாடுகள் திரும்ப அழைத்து வருகின்றன.
அதேசமயம், ஆப்கானியர்களும் நாட்டை விட்டு வெளியேற விமான நிலையத்தில் குவிந்து வருவதால், அங்கு தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இதனிடையே, பயணிக்க தகுந்த ஆவணங்கள் உள்ள பயணிகள் மட்டும் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும், ஆவணங்கள் இல்லாதவர்கள் வீட்டிற்கு செல்லுமாறு தலிபான்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அதேசமயம், காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் சாலைகளில் சோதனை சாவடி அமைத்துள்ள தலிபான்கள், அவ்வழியாக பயணிக்கும் அனைவரையும் தீவிர சோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், காபூல் விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் ஜேர்மனியர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக பெர்லின் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஜேர்மனி அரசாங்க செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஜேர்மனியர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார், உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை.
விரைவில் அவர் ஜேர்மனிக்கு அழைத்து வரப்படுவார் என ஜேர்மனி அரசாங்க செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காபூலில் ஜேர்மனியின் DW செய்தியாளரின் உறவினர் ஒருவர் தலிபன்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஜேர்மனி குடிமகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, ஆப்கானில் உள்ள வெளிநாட்டவர்களிடையே பயத்தை ஏற்படுத்தியுள்ளது.