உக்ரைன் போரால் எதிர்பாராத சிக்கலை எதிர்கொண்டுள்ள ஜேர்மன் கிராமம்
உக்ரைன் போர் காரணமாக, ஜேர்மன் கிராமம் ஒன்று எதிர்பாராத சிக்கல் ஒன்றை எதிர்கொண்டுள்ளது.
என்ன சிக்கல்?
ஆரம்பத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தபோது, அது ஏதோ இரண்டு நாடுகளுக்கிடையிலான பிரச்சினை என்று எண்ணி, பல நாடுகள் அதை ஒரு செய்தியாக மட்டுமே பார்த்தன.
ஆனால், உக்ரைன் போர் வீட்டுக்குள்ளேயே நுழைந்து உணவுப்பொருட்களின் விலைவாசியை உயர்த்தும் என்பதை பலரும் எதிர்பார்க்கவில்லை.
உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, உணவுப்பொருட்கள் விலை உயர்ந்து பல நாடுகளில் மக்கள் உணவுக்குத் திண்டாடும் ஒரு நிலை ஏற்பட்டபோதுதான் போரின் உக்கிர தாக்கம் குறித்து சரியாக உணர்ந்துகொண்டன பல நாடுகள்.
இந்நிலையில், உக்ரைன் போர் தற்போது ஜேர்மன் கிராமம் ஒன்றிற்கு எதிர்பாராத ஒரு சிக்கலை உருவாக்கியுள்ளது.
BERND LAUTER/GETTY IMAGES
ரஷ்யாவை முழுமையாக சார்ந்திருந்த ஜேர்மனி
ஜேர்மனி, தனது எண்ணெய், எரிவாயுத் தேவைகள் என மொத்தத்தில் ஆற்றல் தேவைகளுக்காக பெருமளவில் ரஷ்யாவைச் சார்ந்திருந்தது.
ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க, ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது தடைகள் விதிக்க, பெருமளவில் எண்ணெய், எரிவாயு விநியோகம் செய்துவந்த ரஷ்யா, பழிக்குப் பழிவாங்கத் துவங்கியது.
ஜேர்மனிக்கு வழங்கிவந்த எரிவாயுவை ரஷ்யா நிறுத்தியதால் திகைத்துப்போன ஜேர்மனி, அதற்கு மாற்றாக ஆற்றல் தேவைகளை சந்திப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளில் அனல்மின்சாரம் தயாரிப்பதும் ஒன்று.
அனல் மின்சாரத்துக்கு நிலக்கரி தேவை. ஆகவே, தன்நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தோண்டத் துவங்கியுள்ளது ஜேர்மனி.
அவ்வகையில், Lützerath என்னும் கிராமத்தில் நிலத்துக்கு அடியில் பழுப்பு நிலக்கரி இருப்பது தெரியவந்துள்ளதால், அங்கு சுரங்கம் அமைத்து நிலக்கரி எடுப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.
நிலக்கரி எடுக்கவேண்டுமானால் சுரங்கம் தோண்டவேண்டும். சுரங்கம் தோண்டவேண்டுமானால், அந்த கிராமத்திலிருக்கும் வீடுகளை இடிக்கவேண்டும்.
ஆக, அந்த கிராமத்தின் பெரும்பாலான வீடுகள் காலி செய்யப்பட்டுவிட்டன.
ஆனால், மீண்டும் நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்டுவதால், நிலக்கரியைக் கொண்டு ஆற்றல் தயாரிப்பதால் சுற்றுச்சூழலுக்கு கேடு உண்டாகும் என்பதால் பருவநிலை மாற்ற சமூக ஆர்வலர்கள் இந்த சுரங்கம் தோண்டும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
ஒரு பக்கம் சுமார் 200 சமூக ஆர்வலர்கள், மறுபக்கம் ஆயுதம் தாங்கிய பொலிசார் என வரிசை கட்டி நிற்க, நிலைமை உஷ்ணமாக காணப்படும் நிலையில், நாளைக்குள் சமூக ஆர்வலர்கள் அங்கிருந்து அகலாவிட்டால், அவர்கள் அகற்றப்படுவார்கள் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
BERND LAUTER/GETTY IMAGES