ஜேர்மனியில் கொரோனா உயிர்பலி எண்ணிக்கை 100,000ஐக் கடந்தது... நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி, ஜேர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100,000ஐக் கடந்துவிட்டது என்ற கவலையளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது.
கொரோனா தொடங்கியதிலிருந்து, இதுவரை 100,119 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளொன்றிற்கு கொரோனா தொற்றுக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கையும் 75,961ஆகி, புதிய வரலாறு படைத்துள்ளது.
கிழக்கு மற்றும் தெற்கு ஜேர்மனியிலுள்ள மருத்துவமனைகள் கடும் அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், உயிர்பலி மேலும் அதிகரிக்கும் என வைராலஜி துறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
Robert Koch நிறுவனம், நாளொன்றிற்கு சுமார் 50,000 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நிலையில், அவர்களில் 400 பேர் நாளொன்றிற்கு உயிரிழக்கூடும் என தெரிவித்துள்ளது.
ஜேர்மனி ஏற்கனவே பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், புதிதாக பொறுப்பேற்கும் அரசின் நிர்வாகிகளும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
FDP கட்சித் தலைவரான Christian Lindner கூறும்போது, ஆஸ்திரியாவைப்போல ஜேர்மனியிலும் பொதுமுடக்கம் விதிக்கப்படுவதை தவிர்க்கவேண்டுமானால், உள்ளூர் அளவில் கடுமையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தவேண்டியிருக்கும் என்கிறார்.
அத்துடன், ஜேர்மனியின் புதிய சேன்ஸலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள Olaf Scholzம், நாம் கொரோனாவைத் தடுப்பதற்காக தடுப்பூசிகளும் பூஸ்டர் டோஸ்களும் கட்டாயம் வழங்கவேண்டும் என்றும், இந்த கொள்ளைநோயிலிருந்து விடுபடுவதற்கு தடுப்பூசிதான் வழி என்றும் கூறியுள்ளார்.