உணவகத்திலிருந்து விழுந்து உயிரிழந்த ஜேர்மானியர்... வழக்குக்காக கோவிட் ஆப்பை தவறாக பயன்படுத்திய பொலிசார்
வழக்கு ஒன்றிற்கு சாட்சியம் வேண்டும் என்பதற்காக கோவிட் ட்ராக்கிங் ஆப் ஒன்றை தவறாகப் பயன்படுத்திய ஜேர்மன் பொலிசார் மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது விசாரணை ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்குச் செல்வோர், கொரோனா தொற்றுடைய யாருடனாவது தொடர்பில் இருந்தார்களா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக உருவாக்கப்பட்டது Luca என்ற ஆப்.
அந்த ஆப், உணவகம் அல்லது மதுபானவிடுதிக்கு வந்த நபரின் பெயர், முகவரி, தொலைபேசி எண், மற்றும் அவர் எவ்வளவு நேரம் அவர் அந்த உணவகம் அல்லது மதுபான விடுதியில் செலவிட்டார் என்பது போன்ற விவரங்களைப் பதிவு செய்துவைத்திருக்கும்.
அந்த விவரங்களை வெளியிடுவது ஜேர்மன் சட்டப்படி குற்றமாகும்.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ஜேர்மனியிலுள்ள Mainz என்ற நகரில் உணவகத்துக்குச் சென்ற ஒருவர், கீழே விழுந்து உயிரிழந்திருக்கிறார்.
அந்த சம்பவத்தைக் கண்ட சாட்சியங்களைக் கண்டு பிடிப்பதற்காக, பொலிசார் Luca ஆப்பை பயன்படுத்தியுள்ளார்கள்.
விடயம் வெளியானதைத் தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய பொலிசார் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது விசாரணை ஒன்றும் துவக்கப்பட்டுள்ளது.