ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இவர்களுக்கு மட்டும் அவசர விசாக்கள் வழங்குங்கள்...ஜேர்மன் ஊடகங்கள் விடுத்துள்ள கோரிக்கை
ஆப்கானிஸ்தானில் உயிரை பணயம் வைத்து செய்திகள் சேகரிக்கும் ஊடகவியலாளர்களை உடனடியாக அங்கிருந்து மீட்குமாறு ஜேர்மன் ஊடகங்கள் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
ஜேர்மன் ஊடக அமைப்புகள், தங்களுக்காக ஆப்கானிஸ்தானில் வேலை செய்யும் உள்ளூர் ஆப்கன் அலுவலர்களுக்கு அடைக்கலம் வழங்குமாறு ஜேர்மன் அரசுக்கு அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளன.
ஜேர்மனியின் முக்கிய ஊடகவியலாளர்கள் ஜேர்மன் சேன்ஸலருக்கு எழுதியுள்ள கடிதம் ஒன்றில், தங்கள் அலுவலர்களை ஜேர்மனியிலிருந்து கொண்டு வர வசதியாக அவர்களுக்கு அவசர விசா வழங்கும் திட்டம் ஒன்றை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றிய தாலிபான்கள் காபூலுக்குள் நுழைந்துள்ளதையடுத்து இந்த அவசர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக அவர்கள் தங்களுக்காக பணியாற்றிவந்த நிலையில், தற்போது தாலிபான்கள் ஊடகவியலாளர்களை பழிவாங்குவார்கள் என்ற அச்சம் எழுந்துள்ளது.
அத்துடன், நாட்டைவிட்டு வெளியேற விரும்புவோரையும் தாலிபான்கள் கைது செய்து சித்திரவதை செய்வதுடன், கொலை செய்யவும் வாய்ப்புள்ளது என்பதால், தாமதிக்காமல் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு ஜேர்மன் ஊடகவியலாளர்கள் ஜேர்மன் அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.