அடர்ந்த காட்டுக்குள் வழிதப்பிப்போன ஜேர்மன் சிறுமி: பின்னர் நடந்த அற்புதம்
ஜேர்மனியில் காடு ஒன்றிற்குள் வழிதப்பிப்போன சிறுமி ஒருத்தி, இரண்டு நாட்களுக்குப் பின் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள்.
வெப்பநிலை உறைநிலைக்கு அருகில் இருக்க, இரண்டு இரவுகள் அவள் தனியாக பவேரியாவிலுள்ள அந்த அடர்ந்த, மலைகள் நிறைந்த காட்டுக்குள் சமாளித்த விடயம் உண்மையாகவே ஒரு அற்புதம் என்கிறார்கள் விடயமறிந்தவர்கள்.
பெர்லினைச் சேர்ந்த ஜூலியா என்ற அந்த எட்டு வயது சிறுமி, மீட்கப்பட்டிருக்கிறாள், ஆனால், அவள் அதீத குளிர் காரணமாக hypothermia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறாள் என்கிறார் பவேரியா பொலிஸ் தலைமையக செய்தித்தொடர்பாளர் ஒருவர்.
ஜேர்மனி செக்கோஸ்லோவேகியா நாட்டு எல்லையில், இரு நாட்டு அவசர உதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,400 பேர், இரவும் பகலுமாக 115 மோப்ப நாய்கள், ஹெலிகொப்டர்கள், thermal imaging கமெராக்கள் மற்றும் ட்ரோன்கள் உதவியுடன் குழந்தையைத் தேடி அடர்ந்த மரங்களும் மலைகளும் அடங்கிய அந்த காட்டுக்குள் அலைந்த நிலையில், செக்கோஸ்லோவேகியா நாட்டைச் சேர்ந்த வன ஊழியர் ஒருவர் ஜூலியாவைக் கண்டுபிடித்துள்ளார்.
நடந்தது என்னவென்றால், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஜூலியா, அவளது சகோதரன் மற்றும் உறவினரான ஒரு சிறுவன் ஆகியோர், ஜூலியாவின் பெற்றோருடன் வாக்கிங் சென்றபோது அவர்கள் பிள்ளைகளைத் தவறவிட்டு விட்டார்கள். அவசர உதவிக்குழுவிற்கு தகவலளிக்கப்பட்ட நிலையில், அவர்கள் பையன்கள் இருவரையும் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், ஜூலியாவைக் கண்டுபிடிக்கமுடியவில்லை.
ஒரு கட்டத்தில், இது உயிருக்கு ஆபத்தான, மிகவும் அபாயமான ஒரு சூழல் என்று கூறி பொலிசாரே பயந்திருக்கிறார்கள்.
நேரம் கடந்து செல்ல, செவ்வாய்க்கிழமை காலை, இனி குழந்தை உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு என அதிகாரிகள் கவலையடைந்திருக்கிறார்கள்.
கலவர தடுப்பு பொலிசார் ஒருபக்கம், மோப்ப நாய்களுடன் தேடும் பொலிசார் ஒருபக்கம், thermal imaging கமெராக்களுடன் ஹெலிகொப்டர்கள் ஒருபக்கம், ட்ரோன்கள் ஒருபக்கம், ஆல்ப்ஸ் மலையேற்ற படைவீரர்கள் ஒருபக்கம் என எங்களால் ஆன அனைத்து படைகளையும் களமிறக்க, கடைசியாக செக் நாட்டு வன ஊழியர் ஒருவர் சிறுமியைக் கண்டுபிடித்தது அதிர்ஷ்டம்தான் என்கிறார் பவேரிய உள்துறை அமைச்சரான Joachim Herrmann.
பவேரிய செஞ்சிலுவைச் சங்கம், இதுபோன்ற ஒரு அடர்ந்த காட்டில் ஒரு குழந்தையைக் கண்டுபிடிக்க முடிந்தது உண்மையாகவே ஒரு அற்புதம்தான் என்று கூறியுள்ளது.