இந்த நாடு ஜேர்மனியை பல ஆண்டுகளாக உளவு பார்த்து வருகிறது... ஜேர்மன் உளவுத்துறை தலைவர்கள் எச்சரிக்கை
சீனா ஒரு அச்சுறுத்தல் என ஜேர்மனியின் மூன்று உளவு ஏஜன்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவைக் குறித்து அலட்சியமாக இருப்பது நல்லதல்ல என அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை எச்சரித்துள்ளனர்.
ஜேர்மனியின் பெடரல் உளவு ஏஜன்சி, இராணுவ உளவு ஏஜன்சி மற்றும் உள்நாட்டு உளவு ஏஜன்சி ஆகிய மூன்று உளவு ஏஜன்சிகளின் தலைவர்களும், சீனா தொடர்பில் எச்சரிக்கைகள் விடுத்துள்ளனர்.
இதற்கு முன் உளவு ஏஜன்சிகள் விடுத்த எச்சரிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், ரஷ்யா உக்ரைனை ஊடுருவது தொடர்பில் தாங்கள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்ததை கவனித்திருந்தால் ஆற்றல் தொடர்பில் இந்த அளவுக்கு பிரச்சினை வந்திருக்காது என்றும் கூறுகிறார்கள் அவர்கள்.
அதே தவறை சீனா விடயத்திலும் ஜேர்மன் அரசியல்வாதிகளும், தொழில்துறையினரும் செய்யக்கூடாது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சீனா பல ஆண்டுகளாக ஜேர்மனியின் இராணுவத்தை உளவு பார்த்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யா புயல் என்றால், சீனா பருவநிலை மாற்றம் என்கிறார் உள்நாட்டு உளவு ஏஜன்சியின் தலைவரான Thomas Haldenwang.
அதாவது, ரஷ்யா வெளிப்படையாக மோதுகிறது, சீனாவோ இரகசியமாக உளவு பார்க்கிறது என்பது அதன் பொருள்.
சீனா தனது தொழில்துறைக் கூட்டாளிகளிடமிருந்து தொழில்நுட்பத்தைத் திருடும் பழக்கம் கொண்டது என குற்றச்சாட்டு உள்ள நிலையிலும், எதிர்காலத்தைக் குறித்துக் கவலைப்படாமல், தற்கால லாபங்களுக்காக பல ஆண்டுகளாக ஜேர்மனி சீனாவில் பெருமளவில் வர்த்தக முதலீடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.