20 மில்லியன் யூரோ மதிப்பிலான பிட்காயினை தொலைத்த ஜேர்மானிய நீதித்துறை
ஜேர்மனியில் போதை மருந்து வியாபாரி ஒருவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 20 மில்லியன் யூரோ மதிப்பிலான பிட்காயினை அரசு சட்டத்தரணி அலுவலகம் தொலைத்துள்ளது.
குறித்த போதை மருந்து விற்பனை தொடர்பில் கைதான 34 வயது Nicolas Kelsch, விசாரணை முடிந்து 14 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் இருந்து 2017ல் கைப்பற்றப்பட்ட பிட்காயினே தற்போது மாயமாகியுள்ளது. இணையத்தில் போதை மருந்து விற்பனை மேற்கொண்டு வந்த Nicolas Kelsch, அதன் மூலம் பெருந்தொகை சம்பாதித்துள்ளார்.
சுமார் 10 மில்லியன் யூரோ அளவுக்கு அவர் போதை மருந்து விற்பனையில் பணம் திரட்டியுள்ளார். அந்த தொகையை அவர் பிட்காயினாக மாற்றி, சேமித்து வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே, அவரை கைது செய்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பிட்காயினையும் பறிமுதல் செய்தனர்.
தற்போது பிட்காயினின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ள நிலையில், Nicolas Kelsch கைவசம் இருந்த பிட்காயின் மதிப்பும் அதிகரித்துள்ளது.
நீதித்துறை வசமிருந்த பிட்காயின் தற்போது மாயமானதாக கூறப்படும் நிலையில், விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பிட்காயினை பொருத்தமட்டில், உரிய கடவுச்சொல் அளித்தால் மட்டுமே அந்த தொகையை பயன்படுத்த முடியும். மாயமான பிட்காயின் தொடர்பில் உரிய கடவுச்சொல் அறிந்தவர்களே, அதை தங்கள் வசம் மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இன்னொரு தரப்பு, சிறையில் இருக்கும் Nicolas Kelsch, திட்டமிட்டு நீதித்துறை வசமிருந்த பிட்காயினை கைப்பற்றி இருக்கலாம் எனவும் கூறுகின்றனர்.
ஆனால் அவ்வாறு நடந்தால், அவரை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லை எனவும், ஒரே வழக்கில் இரண்டு முறை தண்டிக்க முடியாது எனவும் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.