ஜேர்மன் இளைஞருக்கு சிறை தண்டனை விதித்த துபாய் நீதிமன்றம்! நடந்தது என்ன?
ஐக்கிய அமீரகத்தில் விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடிய குற்றத்திற்காக ஜேர்மன் இளைஞருக்கு துபாய் குற்றவியல் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட 37 வயது ஜேர்மன் இளைஞர், சுமார் 38,000 திர்ஹம் மதிப்புள்ள இரண்டு ரோலக்ஸ் கடிகாரங்களைத் திருடியது நிரூபணம் ஆனதைத் தொடர்ந்து அவருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிஸினஸ் பே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் அந்த கடிகாரங்கள் இருந்துள்ளன. அதனைப் பார்த்த அந்த நபர், கார் கதவை எளிமையாக திறக்க, அந்த காரின் லைட்டிங் வயர்களை தான் வைத்திருந்த ஒரு எலெக்ட்ரானிக் கருவியுடன் இணைத்தார்.
இதனால் வாகனத்தின் பிரேக் மற்றும் பின்புற விளக்குகள் பழுதடைந்தன. காரின் உரிமையாளர், தனது காருக்கு திரும்பி வந்து பார்த்தபோது, அதன் மின் அமைப்பு வேலை செய்யாததைக் கவனித்தார்.
அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத அவர், பிறகு வீட்டிற்கு வந்ததும், காருக்குள் வாங்கி வைக்கப்பட்டிருந்த புதிய ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் காணாமல் போனதை கண்டுபிடித்து, உடனடியாக துபாய் பொலிஸில் நடந்த சம்பவத்தை தெரிவித்து புகார் அளித்தார். இந்த சம்பவம் கடந்த மார்ச் மாதம் நடந்தது.
பிறகு, குறித்த ஜேர்மன் இளைஞரை பொலிஸார் சந்தேகநபராக கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு, அந்த நபர் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், அவர் அந்த கடிகாரத்தை ஒரு அல்ஜீரிய நபருக்கு 28,000 திர்ஹம்களுக்கு விற்றதாகக் கூறினார்.
Image Credit: Gulf News
இந்த நிலையில், இந்த வழக்கில் துபாய் குற்றவியல் நீதிமன்றம் அந்த நபரை குற்றவாளி என்று அறிவித்தது, ஆனால் வழக்கறிஞர்கள் தண்டனையை மேல்முறையீடு செய்தனர்.
அந்த நபரின் வழக்கறிஞர் முகமது அல் நஜார் கூறுகையில், "வாக்குமூலம் கட்டாயப்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் அவர் காரைத் திறக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சாதனம் மற்றும் கைக்கடிகாரங்களை விற்றதாகக் கூறி அவர் எடுத்த பணம் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படவில்லை" என்று வாதத்தை முன்வைத்தார்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகள் வழக்கறிஞரின் வாதத்தை நிராகரித்து, அந்த நபருக்கு 3 மாத சிறைத்தண்டனை விதித்து பின்னர் நாடு கடத்தப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு 38,000 திர்ஹம் அபராதமும் விதிக்கப்பட்டது.