புடின் ஜனாதிபதியாக இருக்கும்வரை எங்களால் அதைச் செய்யமுடியாது: ஜேர்மனி தெரிவித்துள்ள முக்கிய தகவல்
புடின் ஒரு நாட்டின் தலைவராக இருக்கும் வரையில், தங்களால் அவர் மீது நடவடிக்கை எடுக்க இயலாது என்று கூறியுள்ளார் ஜேர்மன் நீதித்துறை அமைச்சர்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர் தொடர்பில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையிலும், ஜேர்மனி தற்போது ரஷ்ய ஜனாதிபதி புடினை விசாரணைக்குட்படுத்த இயலாத நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளார் ஜேர்மன் பெடரல் நீதித்துறை அமைச்சரான Marco Buschmann.
ஜேர்மனியைப் பொருத்தவரை, புடின் ஒரு நாட்டின் தலைவராக இருக்கும் வரையில் அவரை விசாரணைக்குட்படுத்தமுடியாது என்றார் அவர். அதே நேரத்தில், போர்க்குற்றங்களில் ஈடுபடுவோரை சடத்தின் முன் நிறுத்துவதற்கான பிற வழிகளை ஜேர்மனி முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
ஜேர்மனி ஒரு சரியான வடிவமைப்பில் ஒரு விசாரணையைத் துவங்கியுள்ளது என்று கூறும் Buschmann, அதற்காகத்தான் தாங்கள் படிப்படியாக ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், பிறகு குற்றவாளிகள் சிக்கும்போது அவர்களுக்கெதிராக அவற்றை பயன்படுத்த முடியும் என்றும் கூறியுள்ளார் Buschmann.
Photo Credit: asc / AFP
இந்த போர்க்குற்றவாளிகள் முதலானோர் எங்களிடம் சிக்கும்போது, ஒருவேளை அவர்கள் ஐரோப்பாவில் எங்காவது இருக்கும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக எங்களிடம் ஆதாரங்கள் இருப்பதால், அவர்களை விசாரணைக்குட்படுத்துவோம் என்கிறார் அவர்.
அத்துடன், ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள நிலையில், ஊடுருவலின்போதும், இப்போது நடந்துகொண்டிருக்கும் போரின் போதும் நடக்கும் போர்க்குற்றங்களுக்கெதிராக வேறு ஏதாவது அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், அப்போது ஜேர்மனி தங்களிடம் இருக்கும் ஆதாரங்களை அளிக்கும் என்று கூறிய Buschmann, குறிப்பாக நெதர்லாந்தின் The Hague நகரில் அமைந்திருக்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஆதாரங்களை ஒப்படைக்க ஜேர்மனி விரும்புவதாக தெரிவித்தார்.