புடினுக்கு சாதகமாக கருத்து தெரிவித்த ஜேர்மன் கடற்படைத் தலைவர் திடீர் ராஜினாமா!
ரஷ்யா அதிபர் புடின் குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கிய ஜேர்மன் கடற்படைத் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா தலைநகர் டெல்லியில் பேசிய ஜேர்மன் கடற்படைத் தலைவர் Schoenbach, புடினை மேற்கத்திய நாடுகள் சமமாக நடத்த முற்படுகின்றன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மரியாதைக்குரியவர். அவருக்கு தேவையான மரியாதை அளிப்பது மிகவும் சுலபமான விஷயம் என கூறினார்.
மேலும், ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியாவை ஒருபோதும் உக்ரைனால் மீண்டும் கைப்பற்ற முடியாது என தெரிவித்தார்.
ரஷ்யா-உக்ரைன் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் Schoenbach-ன் கருத்து சர்ச்சையை கிளப்பியது.
Schoenbach-ன் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து, ஜேர்மனியின் கருத்தல்ல என விளக்கமளித்த ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம், அவ்வாறு கருத்து தெரிவித்த கடற்படைத் தலைவரை விமர்சித்தது.
விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து ஜேர்மன் கடற்படைத் தலைவர் Schoenbach தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து Schoenbach வெளியிட்ட அறிக்கையில், உடனடியாக எனது கடமைகளிலிருந்து விடுவிக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் Christine Lambrecht-க்கு கோரிக்கை விடுத்தேன்.
அமைச்சர் எனது கோரிக்கை ஏற்றுக்கொண்டார் என Schoenbach தெரிவித்துள்ளார்.