11,000 பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்த பெண்: ஜேர்மன் நீதிமன்றத்தில் ஆஜர்
ஜேர்மனியில், 11,412 பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காக விசாரணைக்குட்பட இருந்த பெண் ஒருவர் தலைமறைவான நிலையில், தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
Irmgard Furchner (96) என்ற அந்த பெண், Stutthof என்ற கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த சித்திரவதை முகாமில் 1943க்கும் 1945க்கும் இடையில் செயலராக பணிபுரிந்தவராவார்.
அந்த காலகட்டத்தில், Stutthof சித்திரவதை முகாமில் 11,412 கொல்லப்பட்டார்கள். அந்த கொலைகளுக்கு உடந்தையாக இருந்ததாக Furchner மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டிய அவர், அதிகாலை தான் தங்கியிருந்த முதியோர் இல்லத்திலிருந்து வெளியேறி தலைமறைவானார்.
அவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாததால், நீதிபதி அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்க, பொலிசார் அவரைத் தேடும் முயற்சியில் இறங்கினர்.
அன்றே Hamburg என்ற இடத்தில் அவர் பொலிசாரிடம் சிக்கினார். இந்நிலையில், காவலில் அடைக்கப்பட்டிருந்த அவர் நேற்று Itzehoe என்ற நகரில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
சக்கர நாற்காலி ஒன்றில் அமரவைக்கப்பட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட Furchner, தலையில் ஸ்கர்ஃப், முகத்தில் மாஸ்க் என அணிந்திருந்ததால் அவரது முகம் சரியாக தெரியவில்லை.
Holocaust என்று அழைக்கப்படும், வரலாற்றில் கூட்டம் கூட்டமாக மோசமான வகையில் கொல்லப்பட்ட யூதர்களுக்கு எப்படியாவது நீதி கிடைக்கச் செய்யவேண்டும் என்ற நோக்கில் அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளின் கீழ், சமீபத்தில் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டுள்ள நபர் Furchner என்பது குறிப்பிடத்தக்கது.