'முகத்தில் சேற்றை பூசிக்கொண்டது இதற்காக தான்' மன்னிப்பு கேட்ட ஜேர்மன் தொலைகாட்சி நிருபர்
ஜேர்மனியில் வெள்ளத்தால் நிலைகுலைந்துபோன நகரத்தை சுத்தம் செய்வது போல் நாடகமாடிய பெண் நிருபர் தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.
Susanna Ohlen (39) என்ற பிரபல ஜேர்மன் தொலைக்காட்சி நிருபர், ஜேர்மனியிலுள்ள Bad Munstereifel என்ற நகரத்துக்கு நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கும் குழுவுடன் சென்றிருந்தார்.
அந்த நகர மக்கள், பெருவெள்ளத்தால் நிலைகுலைந்துபோன தங்கள் நகரத்தை தாங்களே சுத்தம் செய்து வரும் நிலையில், Susanna தானும் நகரை சுத்தம் செய்வதுபோல காட்டுவதற்காக, தரையிலிருந்து சேற்றை எடுத்து தன் மீது பூசிக்கொண்டுள்ளார்.
Susanna தன் முகத்திலும் கைகளிலும் சேற்றைப் பூசிக்கொள்வதை அப்பகுதியிலிருந்த வீடு ஒன்றிலிருந்த ஒருவர் தனது மொபைலில் வீடியோ எடுத்து, அதை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டார். இந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, RTL தொலைக்காட்சி Susannaவை பணி நீக்கம் செய்துவிட்டது.
இந்நிலையில், Susanna Ohlen இந்த சம்பவம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்புக்கேட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "முந்தைய நாட்களில் நான் ஏற்கனவே தனிப்பட்ட முறையில் உதவி செய்துள்ளேன். அன்று காலையில் மற்ற உதவித் தொழிலாளர்களின் முன்னால் ஒரு சுத்தமான உடலுடன் கேமராவில் தோன்றுவதற்கு நான் வெட்கப்பட்டேன். எனவே நான் எதைப்பற்றியும் நினைத்துப் பார்க்காமல் என் ஆடைகளில் மண்ணைப் பூசினேன்.
ஒரு பத்திரிகையாளராக எனக்கு இது ஒருபோதும் இவ்வாறு நடந்திருக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட அனைவரின் துன்பத்தையும் உண்மையிலேயே உணர்ந்த எனக்கு இது நடந்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
Susanna, 2008இலிருந்து RTL தொலைக்காட்சியில் செய்தியாளராக பணிபுரிவதுடன், Good Evening RTL, Good Morning Germany ஆகிய பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.