பிரித்தானியாவின் கொரோனா நிலைமை நம்பிக்கையை அளிக்கிறது: ஜேர்மன் அறிவியலாளர்
கொரோனா கட்டுப்பாடுகளை நெகிழ்த்திய நிலையிலும் பிரித்தானியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை குறைந்து வருவது நம்பிக்கையை அளிப்பதாக ஜேர்மன் வைராலஜி துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை முதல் வாரம் துவங்கி ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இதனால், கொரோனாவின் நான்காவது அலை கட்டுக்குள் அடங்காமல் சென்று விடுமோ என்ற ஒரு அச்சம் உருவாகியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டுமே ஜேர்மனியில் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 1,183, உயிரிழப்பு 2.
ஆனால், Hamburgஐச் சேர்ந்த வைராலஜி துறை நிபுணரான Jonas Schmidt-Chanasit, பிரித்தானியாவில் கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்ட பின்னரும் கொரோனா தொற்று குறைந்து வருவது ஜேர்மனிக்கு நம்பிக்கையை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
எப்படி பிரித்தானியாவில் தடுப்பூசி திட்டம் கொரோனாவை எதிர்கொள்ள உதவியாக உள்ளதோ அதேபோல நாமும் அனைவரும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்கிறார் அவர்.
நேற்றைய நிலவரப்படி ஜேர்மனியில் 54.8 சதவிகிதத்தினர் இரண்டு டோஸ் தடுப்பூசியும், 62.4 சதவிகிதத்தினர் ஒரு டோஸ் தடுப்பூசியும் பெற்றுக்கொண்டாயிற்று என்பது குறிப்பிடத்தக்கது.