ஜேர்மன் சுகாதார அமைச்சரை கடத்த சதி செய்த பெண் கைது; உள்நாட்டு போரை தூண்ட திட்டம்
அரசாங்கத்தின் கோவிட்-19 வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை எதிர்த்த தீவிரவாதக் குழுவில் சேர்ந்த பெண்.
சுகாதார அமைச்சரை கடத்தப்பட வேண்டும், தேவைப்பட்டால் கொலைகள் செய்ய வேண்டும் என்று திட்டம்.
ஜேர்மன் சுகாதார அமைச்சரைக் கடத்தத் திட்டமிட்ட ஊரடங்கு எதிர்ப்புக் குழுவின் தலைவர் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு பெண்ணை பொலிசார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் பிற வன்முறைச் செயல்களுக்குத் தயார் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரை பொலிஸார் கைது செய்தபோது, சுகாதார அமைச்சர் Karl Lauterbach-ஐ கடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இது குறித்து விசாரணை செய்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட அதிகாரிகள், இப்போது ஐந்தாவது சந்தேக நபராக அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
REUTERS/Michele Tantussi
எலிசபெத் ஆர். (Elisabeth R.) என்று பெயரிடப்பட்ட அவர், இந்த சுகாதார அமைச்சரை கடத்துவதற்கும், வன்முறை தாக்குதல்களுக்கும் திட்டமிடுவதற்குப் பொறுப்பாக இருந்ததாகக் கருதப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனவரி 2022-ல், ஜேர்மன் அரசாங்கத்தின் கோவிட்-19 வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்த ஒரு தீவிரவாதக் குழுவில் சேர்ந்ததாக அவர் குற்றம் சாட்டப்பட்டார்.
குழுவின் மையக் குறிக்கோள் "ஜேர்மனியில் உள்நாட்டுப் போர் போன்ற நிலைமைகளைத் தூண்டி, இறுதியில் கூட்டாட்சி அரசாங்கத்தையும் நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் தூக்கியெறிவது" என்று அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
நாடு முழுவதும் மின்தடையை ஏற்படுத்தும் வகையில் மின் வசதிகளை அழிப்பதன் மூலம் இந்த குழு இதை அடைய எண்ணியதாக கூறப்படுகிறது.
கூடுதலாக, சுகாதார அமைச்சர் Lauterbach பலவந்தமாக கடத்தப்பட வேண்டும், தேவைப்பட்டால் அவரது பாதுகாவலர்களைக் கொல்ல வேண்டும் என்று குழு முடிவு செய்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
PC: Sean Gallup/Getty Images
குழுவில் எலிசபெத் தலைமையில் ஒரு நிர்வாகக் கிளை இருந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதற்கும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை வாங்குவதற்கும் அவர் முயற்சிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
ஏப்ரலில் இந்த சதித்திட்டம் கண்டுபிடிக்கப்பட்டபோது, கடத்தப்படுவதற்கு இலக்கு வைக்கப்பட்டதன் காரணமாக பொலிஸ் பாதுகாப்பில் இருந்ததாக லாட்டர்பாக் கூறினார்.
COVID-19 நடவடிக்கைகளுக்கு எதிரான சில எதிர்ப்பாளர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் மற்றும் அரசு மற்றும் ஜனநாயகத்தை சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவர்கள் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.
ஜேர்மனியில், கோவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்தப்பட்டதையடுத்து இந்த ஆண்டு ஊரடங்கு எதிர்ப்பு போராட்டங்கள் குறைந்துவிட்டன.